என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிறு, குறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை பெற மானியத்துடன் கடன் அளிக்கும் திட்டம்

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் சிறு, குறு விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளை பெற மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டம் குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்ட ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். 

    கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு விவசாயத்தை மேம்படுத்த நீர்ப்பாசன வசதி ஏற்படுத்திட ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பம்புகள் உள்ளிட்டவற்றை பொருத்துவதற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கும் திட்டம் 2007-08-ம் ஆண்டுமுதல் பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ.1 லட்சம் வங்கி கடன் மற்றும் அதற்கு இணையாக 50 விழுக்காடு அரசு மானியம் அதிகபட்சம் ரூ 50,000 வரை அரசால் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் விவசாயிகளின் 482 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வங்கிகள் தெரிவித்த 300 மனுக்களுக்கு அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 

    மேலும் நிலுவையில் உள்ள 182 மனுக்களை விரைந்து பரிசோதனை செய்யவும், வட்டார அளவில் வங்கியாளர்கள் மற்றும் விவசாயிகள் குழு கூட்டம் நடத்தி விரைந்து பரிசோதனை செய்து கடன் வழங்க வங்கிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர், வேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், முன்னோடி வங்கி மேலாளர் அலியம்மா ஆபிரகாம், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரபாகர் மற்றும் வேளாண்மை துறை, தேசிய வங்கி கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×