என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்டு கிடக்கும் ஷேக் திப்பு சுல்தான்.
வாலிபர் அடித்து கொலை
புதுவையில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடியில் ஒழுங்குமுறை விற்பனைகூடம் பின்புறம் உள்ள புதர் நிறைந்த இடத்தில் ஒரு வாலிபர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவர் வேறு எங்கோ அடித்து கொலை செய்து உடலை இங்கு வந்து யாரோ வீசிசென்று ள்ளனர்.
இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலைசெய்யப்பட்டு கிடந்த வாலிபர் காலாப்பட்டு அருகே உள்ள கூனிமேட்டு கம்பம் கொல்லை பகுதியை சேர்ந்த அப்துல் ரசாக் மகன் ஷேக் திப்பு சுல்தான் (வயது 29) என்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் ஷேக் திப்பு சுல்தான் அப்பகுதியில் டீ கடை நடத்திவந்ததும். அவர் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது.
இடையில் கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் ஷேக் திப்பு சுல்தானை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
இதற்கிடையே ஷேக் திப்பு சுல்தான் பலரிடம் பணம் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பணத்தை அவர் திரும்ப தரவில்லை. பணம் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு ஷேக் திப்பு சுல்தானுக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஷேக் திப்பு சுல்தான் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் ஜூஸ்கடை நடத்திவரும் தனது நண்பர் கவியரசன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு வந்தார்.
ரெயின்போ நகரில் வந்த போது ஒரு கும்பல் ஷேக் திப்பு சுல்தானை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் கடன் வாங்கிய பணத்தை கேட்டு மிரட்டியுள்ளது. அப்போது ஷேக் திப்பு சுல்தான் தனது தந்தைக்கு போன் செய்து நடந்த சம்பவத்தை கூறி வேறு எங்காவது பணம் கடன்வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அந்த கும்பல் கவியரசனை விரட்டி விட்டு ஷேக் திப்பு சுல்தானை மட்டும் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளது.
பின்னர் ஷேக் திப்பு சுல்தானை அடித்து கொலை செய்து உடலை தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடம் பின்புறம் வீசிச்சென்றது. போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே ஷேக் திப்பு சுல்தானை அடித்து கொன்ற சாரம் பகுதியை சேர்ந்த சிவா, மூலகுளத்தை சேர்ந்த தெஸ்தான் மற்றும் குருமாம்பேட் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த கொலையில் மற்ற சிலருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
Next Story






