search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுவையில் தண்டவாளத்தில் வெடி குண்டு பதுக்கிய 4 ரவுடிகள் கைது

    புதுவை தண்டவாளத்தில் வெடி குண்டு பதுக்கிய 4 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காராமணிக்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 9.30 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிதறியது.

    இந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ளவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஏதோ அசம்பாவிதம் நடக்க இருப்பதாக கருதிய அப்பகுதி மக்கள் இதுபற்றி உருளையன்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    மேலும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் மேலும் வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதா என்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மேலும் ஒரு நாட்டு வெடிகுண்டை கைப்பற்றினர்.

    இதை தொடர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நாட்டு வெடிகுண்டுகளை சின்ன கொசப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரிஷி என்ற ரிஷி குமார் (வயது 22), மற்றும் அவரது கூட்டாளிகளான பெரியார் நகரை சேர்ந்த கவுதமன் (23), அரவிந்த் (23) மற்றும் கவியரசன் (22) ஆகியோர் பதுக்கி வைத்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் ரஷி தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    இன்று அதிகாலை அவர்களை போலீசார் சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடம் நடத்திய கிடுக்கி பிடி விசாரணையில் வனத்துறை அலுவலகம் அருகே புதரில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் கவுதம் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதையடுத்து வெடி குண்டு பதுக்கி வைத்தது குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.

    கைது செய்யப்பட்ட ரிஷிக்கு ஏற்கனவே திருமணமாகி விட்ட நிலையில் அவர் ஆட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை விரும்பியதாக கூறப்படுகிறது.

    அந்த பெண்ணை 2வது திருமணம் செய்து கொள்ள விரும்பிய ரிஷி அந்த பெண்ணின் அண்ணனிடம் பெண் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணின் அண்ணன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

    இதனால் அந்த பெண்ணின் அண்ணனை கொலை செய்ய ரிஷி திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தை தனது கூட்டாளிகளிடம்  தெரிவித்துள்ளார்.

    அதனை அவர்களும் ஏற்று கொண்டு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து ரெயில்வே தண்டவாள பகுதியில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், வனத்துறை அலுவலக வளாக புதரில் 2 நாட்டு வெடிகுண்டுகளையும், கவுதம் வீட்டில் ஒரு நாட்டு வெடிகுண்டையும் பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வெடிகுண்டு தயாரிப்பில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    கைது செய்யப்பட்ட ரிஷி மீது ஏற்கனவே கொலை மற்றும் வெடிகுண்டு வழக்குகளும், மற்ற 3 பேர் மீது அடிதடி, கொலை முயற்சி வழக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×