என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.
ஈரோடு:
ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈரோடு ஜவுளி சந்தை களைகட்டியது. இதனால் சில்லரை வியாபாரம் 60 சதவீதம் நடந்தது.
ஈரோடு ஜவுளி சந்தையானது வாரந்தோறும் செவ்வாய்கிழமை நடை பெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு கடந்த சில வாரங்களாக வியாபாரம் மிகவும் மந்த நிலையில் இருந்து வந்தது.
குறிப்பாக நூல் விலை உயர்வு காரணமாக மொத்த வியாபாரம் முற்றிலும் இல்லாமல் இருந்து வந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையானது களை கட்டி காணப்பட்டது.
குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடக போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த மொத்த வியா பாரிகள் அதிக அளவில் ஜவுளி சந்தைக்கு வந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதே போல சில்லரை விற்பனையும் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர்.
இது குறித்து ஜவுளி வியாபாரிகள் சங்க நிர்வாகி செல்வராஜ் கூறியதாவது:-
ரம்ஜான் பண்டிகையை யொட்டி இந்தவாரம் ஜவுளி சந்தையில் மொத்த மற்றும் சில்லரை வியாபாரம் அமோகமாக நடைபெற்றது. பல வாரங்களுக்கு பிறகு கேரளா, ஆந்திராவில் இருந்து மொத்த வியாபாரிகள் வந்திருந்தனர்.
சேலை, வேட்டி, லுங்கி, ஜரிகை வேலைபாடுகள் கொண்ட சுடிதார்கள் அதிக அளவில் விற்பனையானது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் அதிகமாக வந்திருந்தனர். உள்ளூர் பொதுமக்களின் வருகையும் வழக்கத்தை விட அதிக மாகவே காணப்பட்டது.
மொத்த வியாபாரம் 40 சதவீதத்திற்கு மேலும், சில்லரை வியாபாரம் 60 சதவீதம் அளவிலும் நடந்தது என்றார்.
Next Story






