என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
காவேரிப்பட்டணம் அருகே காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்
காவேரிப்பட்டணம் அருகே முகாமிட்டுள்ள காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்,
கர்நாடக வனப்பகுதியில் இருந்து ஆண்டுதோறும், அக்டோபர், நவம்பர் மாதங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதி வழியாக தமிழக வன பகுதிக்குள் வருவது வழக்கம். ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வரக்கூடிய இந்த யானைகள் சுமார் 4 மாதங்களுக்கும் மேல் இந்த பகுதியில் விவசாய பயிர்களை நாசம் செய்வதை தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 3 காட்டு யானைகள், நேற்று முன்தினம் இரவு பாலக்கோடு வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மிட்டஅள்ளி கிராமத்திற்குளு வந்தது. அங்கு தாளமடுவு என்ற பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் நெல், வாழை, தென்னை பயிர்களை சேதப்படுத்தியது.
இந்த நிலையில் 3 காட்டு யானைகள் ஊருக்குள் வந்த தகவல் அறிந்து கிராம மக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் இது குறித்து கிருஷ்ணகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கிருஷ்ணகிரி மற்றும் ராயக்கோட்டை வனத்துறையினர் அங்கு சென்று 3 யானைகளை கண்காணித்து வருகிறார்கள்.
அந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். யானைகள் உள்ள பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் எச்சரித்த வண்ணம் உள்ளனர்.
இன்று 2 வது நாளாக வனத்துறையினர் காட்டுயானைகளை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story






