என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடத்தலுக்கு பயன்படுத்திய காரை படத்தில் காணலாம்.
    X
    கடத்தலுக்கு பயன்படுத்திய காரை படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி அருகே மெடிக்கல் கடை உரிமையாளரை காரில் கடத்திய 2 பேர் கைது

    போச்சம்பள்ளி அருகே மெடிக்கல் கடை உரிமையாளரை காரில் கடத்திய 2 பேரை கைது செய்தனர்.
    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள தாதம்பட்டி ஊராட்சி ஐந்து ஆலமரம் பகுதியை சேர்ந்தவர் செண்பககவுண்டர். இவர் சொந்த ஊரான சேலத்தில் இருந்து குடியேறி 1972-ம் ஆண்டு ஐந்து ஆலமரம் பகுதியில் நிலம் வாங்கி கொண்டு விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றார். 

    இவரது மகன் சண்முகம். இவர் பார்மசி சார்ந்த மருத்துவ படிப்பு முடித்து சொந்தமாக சேலம் அலகாபுரம் பகுதியில் மெடிக்கல் சார்ந்த தொழில் செய்து வந்துள்ளார். 

    இந்நிலையில் சண்முகத்திற்கு அதிக கடன் ஏற்பட்டதாலும், கடன் சுமை அதிகமானதாலும் மெடிக்கல் கடையை பூட்டி விட்டார். இதனால் சொந்த ஊரான தாதம்பட்டி ஐந்து ஆலமரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு மனைவி சத்யாவை அழைத்து கொண்டு வந்துள்ளார்.

    இதனையடுத்து சண்முகம் சேலம் பகுதியில் உள்ள நண்பரான யூகேஷ் (36) என்பவரிடம் 4 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 லட்சம் தொழில் செய்வதற்காக பணம் கடனாக வாங்கியதாக கூறப்படுகிறது. கடன் கொடுத்த பணத்தை சண்முகத்திடம் யூகேஷ் பல முறை கேட்டதாக தெரிகிறது. 

    பணம் கொடுக்காததால் சண்முகத்திடம் சேலம் பகுதியை சேர்ந்த யூகேஷ்  சமாதானமாக பேசி காரில் சேலத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
    இதனால் சந்தேகமடைந்த சண்முகத்தின் மனைவி சத்யா கணவர் சண்முகத்தின் செல்போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் சண்முகத்தின் செல்போன் அணைத்து வைக்கபட்டுள்ள நிலையில் யூகேஷ் சத்யாவின் செல்போனிற்கு தொடர்பு கொண்டு உனது கணவர் என்னிடம் வாங்கிய ரூ.8 லட்சத்தை கொடுத்து விட்டு உன் கணவரை மீட்டு செல்லுமாறு கூறியுள்ளார். 

    இதனால் அதிர்ச்சியடைந்த சத்யா மாமனார் செண்பக கவுண்டரிடம் கூறியுள்ளார். இது குறித்து சண்முகத்தின் தந்தை செண்பககவுண்டர் போச்சம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சண்முகத்தை மீட்க தனிப்படை அமைத்து சேலம் பகுதியில் சண்முகத்தை மீட்டனர். 

    பின்னர் சண்முகத்தை காரில் கடத்திய வழக்கில் யூகேஷ், அஜீத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்ததுடன், சண்முகத்தை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு உடைந்தையாக இருந்து தலைமறைவாகி உள்ள அர்ஜூன், கார்திக் ஆகியோர் இருவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். மேலும் கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×