என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

    நீலகிரி பகுதிகளில் இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
    ஈரோடு:

    நீலகிரி பகுதிகளில் இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப் பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

    மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும், குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நீலகிரி பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் நேற்று பவானிசாகர் அணைக்கு 2,812 கன அடி நீர் வந்தது. இன்று மழைப்பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.21 அடியாக உள்ளது. அணைக்கு 1,411 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காலிங் கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 

    இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கீழ்பவானி பாசனத்திற்காக 2,100 கன அடியும் என மொத்தம் 2 ஆயிரத்து 800 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    Next Story
    ×