என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்டுமாரியம்மன்
கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா
நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவை:
கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமரி சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (19-ந் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முன்னதாக இன்று காலை மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு கிராமசாந்தி நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு மேல் 7.40 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு பூச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
21-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அக்னிச்சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. 22-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு வெள்ளி சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
23-ந் தேதி இரவு 8 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், 24-ந் தேதி இரவு 8 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, இரவு 8 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.
26&ந் தேதி மாலை 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8.30 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 27-ந் தேதி காலை 7 மணிக்கு கோனியம்மன் கோவிலில் இருந்து சக்தி கரகம், அக்னிச்சட்டி புறப்பாடு நடக்கிறது.
28-ந் தேதி காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், 11 மணிக்கு மஞ்சள் நீர், மாலை 6 மணிக்கு மேல் 7.33 மணிக்குள் துலா லக்னத்தில் கொடி இறக்குதல், இரவு 8 மணிக்கு கம்பம் கலைத்தல் நிகழ்ச்சி நடக்கின்றன.
29-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தமிழில் லட்சார்ச்சனை நடக்கிறது. 1-ந் தேதி காலை 7 மணிக்கு சங்காபிஷேகம், மாலை 7 மணிக்கு வசந்த உற்சவம் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. திருவிழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு அபிஷேக பூஜைகளும், மாலை 4 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைகளும் நடக்கிறது.
மேலும் காலை, மாலை இருவேளைகளிலும் யாக சாலை பூஜைகள் நடக்கின்றன.
Next Story






