என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீவிர துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட காட்சி.
    X
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தீவிர துப்புரவு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட காட்சி.

    கிரிவலப்பாதையில் 150 டன் குப்பைகள் அகற்றம்

    கிரிவலப்பாதையில் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 16, 17 ஆகிய நாட்களில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.

    சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்குப் பின்னர் பக்தர்களின் வருகை குறைந்தது. அதன்பின் வழக்கம் போல் பக்தர்கள் சென்று உடனடியாக சாமி தரிசனம் செய்து சென்றனர். 

    சித்ரா பவுர்ணமிக்கு பக்தர்கள் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் பல டன் குப்பைகள் குவிந்தது. அதனை அகற்றும் பணிகள் நேற்று காலை தொடங்கி நடந்து வருகிறது. நேற்று காலை முதல் மாலை வரை கிரிவலப் பாதையில் 150 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்-பட்டது. 

    இப்பணியில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன் குமார் உள்பட பலர் உடனிருந்தனர். 

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

    தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்ட சிறப்பான ஏற்பாடுகளால் கிரிவலத்துக்கு வந்தவர்-களுக்கு சிறு பாதிப்பும் ஏற்படாமல் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டது. பக்தர்களுக்கு குடி நீர், மோர் அன்னதானம் வழங்கப்பட்டது. 

    கிரிவலம் வந்த பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்காக கிரிவலப்பாதையில் 5 இடங்களில் உயர் மருத்துவ சிகிச்சையுடன் 24 மணி நேரமும் இயங்கும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் எந்த ஒரு சிறு அசம்பாவிதம் ஏற்படாமல் பக்தர்கள் அனைவரும் கிரிவலம் முடிந்து பாதுகாப்பாக ஊர் திரும்பி உள்ளனர் என்று தெரிவித்தார்.

    திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக அனைத்து ஊராட்சி பகுதி துப்புரவு பணியாளர்கள் நகரப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததால் பல்வேறு கிராம பகுதிகளில் குப்பைகள் சரியாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது. அதனையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    கிராமப்பகுதிகளில் வாரம் ஒரு முறை துப்புரவு பணி நடப்பது கூட அரிதாக உள்ளதாக கூறுகின்றனர். மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தி வரும் நிலையில் கிராமப்-பகுதிகளில் துப்புரவு பணிகளை மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×