search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    அன்னூரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி போக்சோவில் கைது

    மகளிர் போலீசார் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹரிகரசுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கோவை:

    கோவை அருகே உள்ள அன்னூரை சேர்ந்தவர் ஹரிகரசுதன் (வயது 28). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த 5 வயது சிறுமி வீட்டு முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.

    இதனை பார்த்த ஹரிகரசுதன் சிறுமியிடம் எங்கள் வீட்டில் பூனை குட்டி உள்ளது. விளையாட வருகிறாயா? என ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். வீட்டிற்குள் சிறுமி வந்ததும் கதவை பூட்டிய ஹரிகரசுதன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி சத்தம் போட்டார். சத்தம் வெளியே கேட்டால் மாட்டிக் கொள்வோம் என பயத்தில் இருந்த ஹரிகரசுதன் சிறுமியின் தலையை பிடித்து சுவரில் அடித்தார். இதில் சிறுமியின் தலையில் படுகாயம் ஏற்பட்டு அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி அலறினார்.

    இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஹரிகரசுதன் வீட்டு முன்பு திரண்டனர். பின்னர் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சிறுமியை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் சிறுமியை ஆசை வார்த்தை கூறி வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஹரிகரசுதனை பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் இருந்த ஹரிகரசுதனை மீட்டனர். படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுமி கோவை அரசு ஆஸ்பத்திரியில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஹரிகரசுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×