என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
ஆவின் டெண்டரை ரத்து செய்யக்கோரி கலெக்டர் பெயரில் போலி உத்தரவு அனுப்பிய ஒப்பந்ததாரர் கைது
ஆவின் டெண்டரை ரத்து செய்யக்கோரி கலெக்டர் பெயரில் போலி உத்தரவு அனுப்பிய ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியம் (ஆவின்) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவு இ-மெயிலில் இருந்து கடந்த மாதம் 8-ந்தேதி அதே நிர்வாக பொது மேலாளரின் இ-மெயிலுக்கு கடிதம் ஒன்று சென்றது.
அந்தக் கடிதத்தை பொது மேலாளர் ரவிக்குமார் பார்த்தபோது, அதில் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவு நகல் ஒன்று இருந்தது.
அதில், ஆவினில் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் வெளியிடப்பட்ட 12 வகையான டெண்டர்களில் குளறுபடிகள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. எனவே அதை நிவர்த்தி செய்து மறு டெண்டர் விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கலெக்டரின் உத்தரவு தொடர்பாக வந்த இ-மெயில் குறித்து சந்தேகம் அடைந்த பொதுமேலாளர் இதுகுறித்து கலெக்டர் அலுவலக நிர்வாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
பின்னர் அந்த இ-மெயிலில் வந்த உத்தரவு போலியான உத்தரவு என்பது அவருக்கு தெரிய வந்தது.
இதுகுறித்து கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் (பொது) வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்-கண்ணனிடம் புகார் தெரிவித்தார்.
அவர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் உத்தரவிட்டார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில், காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த ஆவின் ஒப்பந்ததாரரான ஜெகன் என்ற ஜெயச்சந்திரன் (வயது 35) போலியான உத்தரவு நகலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்:-
ஒப்பந்ததாரர் ஜெயச்சந்திரன் மீதான செயல்பாடுகள் குறித்து ஆவின் நிர்வாகத்துக்கு புகார்கள் சென்றது. இவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்றனர்.
Next Story






