என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் பழம் விற்பனை மும்முரமாக நடந்த காட்சி.
    X
    ஈரோட்டில் பழம் விற்பனை மும்முரமாக நடந்த காட்சி.

    பழ மார்க்கெட்டில் குவிந்த மக்கள்

    ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் பழங்கள் மும்முரமாக நடந்தது.
    ஈரோடு:

    ஈரோட்டில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வ.உ.சி. பூங்கா மார்க்கெட்டில் பழங்கள் மும்முரமாக நடந்தது.

    தமிழ் புத்தாண்டான சித்திரை முதல்நாள் நாளை பிறக்கிறது.  இதையொட்டி இன்று ஈரோடு வ.உ.சி. பூங்கா பழ மார்க்கெட்டில்  பழங்களை வாங்குவதற்காக மக்கள் அதிகாலை முதலே குவிந்தனர்.  

    பெண்கள் அதிக அளவில் வந்து இருந்து ஆப்பிள், ஆரஞ்சு,  மாம்பழம் மற்றும் கொய்யாப்பழங்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    பொதுவாக சித்திரை முதல் நாளில் பெண்கள் வீடுகளில் பூஜையில்  ஆப்பிள், மாம்பழம்,  திராட்சை, மாதுளை, கொய்யா  போன்ற பழங்களை வைத்து  பூக்களையும் வாங்கி  ஒரு தட்டில் வைத்து பூஜை பொருட்களுடன் தட்டில் ரூபாய் நோட்டுகள்,  தங்க நாணயங்கள், நகைகளையும் வைத்து அந்தத் தட்டில் கண்ணாடியை வைத்து அந்தக் கண்ணாடி வழியாக ரூபாய் நோட்டுகள் தங்க நாணயங்கள் தங்க நகைகளை பார்ப்பார்கள்.

    இவ்வாறு பார்த்தால் வீட்டில் செல்வம் பெருகும் என ஐதீகம். இதனால் இன்று ஈரோட்டில் உள்ள பழக்கடைகளில் மக்கள் அதிக அளவில் குவிந்தனர். பழங்கள் தேவை அதிகரித்துள்ளதால் சில வகை பழங்கள் விலை ரூ.10 முதல் 30 வரை உயர்ந்துள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்கா பழ மார்க்கெட்டில் இன்று கிலோவுக்கு விற்கப்பட்ட பழங்கள் வருமாறு: ஆப்பிள்-ரூ.160 முதல் ரூ.180, மாம்பழம்-ரூ.120, அண்ணாச்சி பழம் ரூ.20 உயர்ந்து ரூ. 60-க்கு விற்பனையானது.

    இதேப்போல் திராட்சைப்பழம் ரூ.20 உயர்ந்து ரூ.100-க்கு விற்பனையானது. மாதுளை-ரூ.120 முதல் ரூ.200 விற்பனையானது. பன்னீர் திராட்சை - ரூ.100, சாத்துக்குடி-ரூ.70, ஆரஞ்சுபழம்-ரூ.100, சப்போட்டா-ரூ.30 முதல் ரூ.50, கிலோ ரூ.50-க்கு விற்பனையான கொய்யாக்காய் இன்று  30 ரூபாய் உயர்ந்து கிலோ ரூ.80-க்கு விற்பனையானது.

    இதேபோல் பெரியார் நகர், சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தைகளிலும் பொதுமக்கள் அதிக அளவில் சென்று பழங்களை வாங்கி சென்றனர். சித்திரை முதல் நாளான நாளை பொதுமக்கள் அந்த பகுதில் உள்ள கோவிலில் சென்று வழிபடுகின்றனர்.
    Next Story
    ×