என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரியில் நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் தமிழக பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மகாசபைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு பால் உற்பத்தியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். மாவட்ட ஆலோசகர் நசீர் அகமத், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி பெருமா, ஒன்றிய துணைத் தலைவர் கணேசன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் அனுமந்தராஜ், சாப்பரம் தலைவர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
இதில் மேற்கு மாவட்டத் தலைவர் வண்ணப்பா, மேற்கு மாவட்டத் தலைவர் சுப்ரமணிரெட்டி, ஒன்றிய செயலாளர் கண்ணப்பன், மாவட்ட துணைத் தலைவர் வேலு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 ஆக உயர்த்தி, உற்பத்தி மானியமாக லிட்டருக்கு ரூ.5 என அரசு வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி ஒன்றியம் தொடக்க சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 9 வார பால் பண பட்டுவாடாவை உடனடியாக வழங்க வேண்டும்.
கால்நடைத் தீவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 70 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஆகவே, தமிழக அரசு கால்நடை தீவனத்திற்கு 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும். தாது உப்புக்களை இலவசமாக வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு சத்துணவில் ஆவின் பால் அல்லது பால் பவுடர் வழங்க வேண்டும். ஆவின் பால் மற்றும் உப பொருட்களை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Next Story






