என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சி அருகே நிற்காமல் சென்ற அரசு பஸ் கண்ணாடி உடைப்பு
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அருகே தானம் கிராமத்திலிருந்து இருந்து குன்னியூர் வழியாக அரசு பஸ் தியாகதுருகம் வரை செல்வது வழக்கம்.
அதன்படி நேற்று அரசு பஸ் தானத்தில் இருந்து தியாகதுருகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது உதயமாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
இவ்வாறு பஸ் நிற்காமல் சென்றதால் ஆத்திரம் அடைந்த மாணவன் ஒருவர் கற்களை எடுத்து பஸ்சின் மீது வீசினார். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது.
இதுகுறித்து கண்டக்டர் குருநாதன் தியாகதுருகம் போலீசில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் உதயமாம்பட்டு பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களை அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவர் ஒருவர் கல்வீசி தாக்கியது தெரிய வந்தது.
எனவே அந்த மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பஸ்நிற்காமல் சென்றதால் அரசு பள்ளி மாணவன் ஒருவர் பேருந்தின் மீது கல் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






