என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. படுகாயம் அடைந்த டிரை
    X
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி. படுகாயம் அடைந்த டிரை

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் டிரைவரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி திடீர் போராட்டம்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் டிரைவரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). அரசு பஸ் டிரைவர். இவர் இன்று காலை சென்னை அம்பத்தூரில் இருந்து வேலூர் வந்த அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நுழைவு வாயிலில் அதிகளவில் பஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அப்போது டிரைவர் செல்வம் பஸ்சில் ஹாரன் அடித்தார்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள ஓட்டலில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் ஹாரன் அடிக்கக் கூடாது என ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

    வாகன நெரிசல் அதிகமாக உள்ளது கண்டிப்பாக ஹாரன் அடித்தால்தான் வழி கிடைக்கும் என கூறி டிரைவர் செல்வம் ஹாரன் அடித்தார்.

    இதனால் அவரிடம் தகராறு செய்த ஓட்டல் ஊழியர்கள் இருவரும் ஆவேசம் அடைந்தனர்.அவர்கள் ஆபாசமாக திட்டிக்கொண்டே பஸ்சின் பின்னால் வந்தனர். அதற்குள் பஸ் நிலையத்திற்குள் பஸ் சென்றது.

    டிரைவர் செல்வம் கீழே இறங்கினார். பின் தொடர்ந்து சென்ற ஓட்டல் ஊழியர்கள் இருவரும் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். கையில் இருந்த சாவியால் தாக்கியதில் டிரைவர் செல்வம் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனை கண்டு டிரைவர் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கிருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுப்பதற்காக மற்ற அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் வேகமாக சென்றனர். 

    இதனை கண்டதும் ஓட்டல் ஊழியர்கள் இருவரும் பஸ் நிலையத்தில் இருந்து வேகமாக வெளியே ஓடிவந்தனர். ஓட்டலை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அதுவரை பஸ்களை இயக்க மாட்டோம் எனக் கூறி அனைத்து அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஒரு பஸ்சும் வெளியே இயக்கப்படாமல் இருந்தது.

    அதே நேரத்தில் காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்களும் செல்லியம்மன் கோவில் முன்பு நிறுத்தப்பட்டது.

    காட்பாடியில் இருந்து வேலூருக்கு எந்தவித வாகனமும் வரமுடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலாறு பழைய பாலத்தில் இருந்து காட்பாடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சம்பவ இடத்திற்கு வேலூர் வடக்கு மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போக்குவரத்து அலுவலர்களும் அங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். டிரைவர் செல்வத்தை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். 

    இதனால் எங்களது உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. உடனடியாக டிரைவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை வாகனங்களை இயக்க மாட்டோம் டிரைவர் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.

    பஸ்நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர். டிரைவரை தாக்கியவர்கள் கைது செய்யப் படுவார்கள் உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    45 நிமிட பேச்சு வார்த்தைக்கு பிறகு டிரைவர்கள் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த டிரைவர் செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து சீரானது.

    டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடிய  தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×