என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிங்கம்
    X
    சிங்கம்

    கடலூர் அருகே சிங்கம் நடமாட்டமா?- விவசாயிகள் பீதி

    கடலூர் பகுதியில் சிங்கம் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியதை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பீதி அடைந்தனர்.
    கடலூர்:

    கடலூர் அருகே திருமாணிக்குழி, மாவடிபாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஏராளமான வாழைதோட்டம் மற்றும் கரும்புதோட்டம் உள்ளது. இந்த விளைநிலங்களுக்கு விவசாயிகள் அதிகாலை முதல் இரவு வரை வேலைபார்த்து வருகிறார்கள். எனவே இந்த நிலங்களில் விவசாயிகள் நடமாட்டம் அதிகம் காணப்படும்.

    இன்று அதிகாலை இந்த பகுதியில் சிங்கம் நடமாட்டம் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனை அறிந்ததும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பீதி அடைந்தனர். காலை நேரத்தில் வயல்களுக்கு செல்லாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் கிராம பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து வனத்துறை மற்றும் திருப்பாதிரிபுலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருப்பாதிரிபுலியூர் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். திருமாணிக்குழி பகுதியில் செம்மண்குவாரி உள்ளது. இந்த பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் செம்மண் லாரியில் ஏற்றி வருகிறார்கள்.

    எனவே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒருநபர் விளையாட்டாக சமூக வலைதளங்களில் சிங்கம் நடமாட்டம் உள்ளதாக பரப்பியதை ஒப்புக்கொண்டார்.

    இதனைத்தொடர்ந்து அது புரளி என தெரியவந்தது. இதனால் போலீசாரும், கிராம விவசாயிகளும் நிம்மதியடைந்தனர். என்றாலும் வடமாநில நபரை போலீசார் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்து அனுப்பினர்.

    Next Story
    ×