என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அமைப்பின் தலைவர் ராமு பேசிய போது எடுத்த படம்.
ஓசூர், தளி, வேப்பனபள்ளி தொகுதிகளை தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கவேண்டும் அரசுக்கு கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, வேப்பனபள்ளி தொகுதி களை தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப் பட்டுள்ளது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி தோட்டக்கலை சாகுபடி விவசாயிகள் அமைப்பின் ஆலோசனைக்கூட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, அமைப்பின் தலைவர் ராமு, தலைமை தாங்கினார். அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட கவுன்சிலருமான பாபு என்ற வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். பின்னர்அமைப்பின் தலைவர் ராமு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-
"ஓசூர் பகுதி, காய்கறிகள், பழங்கள், மலர்கள் சாகுபடிக்கு ஏற்ற நல்ல சீதோஷ்ண நிலையை கொண்ள்ளது. இங்கிருந்து, நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள், சென்னை, கோவை மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. மேலும், ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் மதிப்பில் வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதியும் நடைபெற்று வருகிறது.
இத்தகைய சிறப்புகளை கொண்ட இந்த பகுதிகளில், விவசாய நிலங்களை, தொழிற்சாலைகளுக்கு வழங்குவதை தவிர்த்து, ஓசூர், தளி, வேப்பனபள்ளி ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளை, "தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலமாக "அறிவித்து, ஆணை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். எங்களின் இந்த கோரிக்கைக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து மாநில மற்றும் தேசிய கட்சிகளும் ஆதரவு தர வேண்டும்.
தோட்டக்கலை பாதுகாப்பு மண்டலம் அமையும் பட்சத்தில், இந்த பகுதிகளில் தோட்டக்கலை சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் உருவாகி அதன்மூலம் ஏராளமான வேலைவாய்ப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு எங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்து நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைக்காக குரல் கொடுத்துவரும், வேப்பனபள்ளி எம்.எல்.ஏ.கே.பி.முனுசாமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்".
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






