என் மலர்
உள்ளூர் செய்திகள்

வருவாய்த்துறை குரூப் -2 நேரடி நியமன அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
திருவண்ணாமலையில் வருவாய்துறை நியமன அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை நியமன அலுவலர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை:
தமிழ்நாடு வருவாய்த்துறை குரூப் - 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 8.4.2009 முதல் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் ஒரே சீரான வடிவத்தில் துணை தாசில்தார் பட்டியல்கள் மறுவரையறை செய்து வெளியிடப்படுவதை உறுதி செய்திட வேண்டும். அதனடிப்படையில் திருத்திய தாசில்தார், துணை கலெக்டர் பட்டியல்களை வெளியிட வேண்டும்.
2019&ம் ஆண்டு முதல் 12.3.2019 நாளிட்ட தீர்ப்பின்படி தகுதியான நபர்களை இடம்பெறச் செய்து அனைத்து மாவட்டங்களிலும் துணை தாசில்தார் பதவி உயர்வு பட்டியலை வெளியிட்டு துணை தாசில்தார் பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
வருவாய்த்துறையில் தற்போதைய அதிகமான பணிச்சுமை கருத்தில்கொண்டு அனைத்து சமூக பாதுகாப்புத் திட்ட தாசில்தார் அலுவலகங்களில் ஒரு துணை தாசில்தார் பணியிடமும் மற்றும் ஒவ்வொரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள பிறப்பு இறப்பு பதிவு மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், பேரிடர் மேலாண்மை தொடர்பான பணிகளை செயல்படுத்தவும் துணை தாசில்தார் நிலையில் ஒரு பணியிடம் உருவாக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நேரடி நியமன உதவியாளருக்கு அமைச்சுப்பணி சிறப்பு நிதி வருவாய் ஆய்வாளர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் அடுத்தடுத்து 5ஆண்டுக்குள் முறையாக வழங்க வேண்டும்.
மேலும் 5 ஆண்டுகள் பயிற்சி முடித்த நேரடி நியமன உதவியாளருக்கு பயிற்சி முடிவுற்றவுடன் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story






