என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்.
    X
    கோப்புப்படம்.

    தார்சாலையை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

    கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தார்சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தைச் சேர்ந்த கொடியம்பாளையம் தீவு கிராமம் தனி ஊராட்சி ஆக இருந்து வருகிறது. இங்கு சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள அனைத்து குடும்பங்களைச் சார்ந்தவர்களும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

    இந்தத்தீவு கிராமத்துக்கு கொள்ளிடத்திலிருந்து தரை வழியாக செல்வதற்கு வசதி வாய்ப்பு இல்லை.எனவே பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலில் படகின் மூலம் அரை மணி நேர பயணத்திற்குப் பின்பு கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சென்று அடைய முடியும். இதனால் கொள்ளிடத்திலிருந்து கடலூர் மாவட்டம், சிதம்பரம் வழியாகச் சென்று இளந்திரைமேடு கிராமத்திலிருந்து கொடியம் பாளையம் தீவு கிராமத்துக்கு தரைவழியாக சென்று வருகின்றனர்.

    கொள்ளிடம் பகுதியிலிருந்து ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்துறை மற்றும் கல்விதுறை சார்ந்த அதிகாரிகள் தரை மார்க்கமாக கொள்ளிடத்திலிருந்து 20 கிலோமீட்டர் தூரம் கடந்து சென்று கொடியம்பாளையம் தீவு கிராமத்துக்குச் சென்று வருகின்றனர். இங்கு இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

    இங்கு 7 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த அனைத்து ஆசிரியர்களும் கொள்ளிடத்திலிருந்து சிதம்பரம் வழியாகத்தான் தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில் கொடியம் பாளையம் கிராமத்துக்குச் செல்லும் 500 மீட்டர் தூர தார்சலை மேம்படுத்தப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் இந்த சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறிக் கிடக்கின்றன இந்த சாலையில் செல்லும்போது இரு சக்கர வாகன ஓட்டிகளும், சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகளும் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

    வயதான ஆண் மற்றும் பெண்கள் நடந்து செல்லும் போது தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இக்கிராமத்திலிருந்து வெளியூர்களுக்குச் செல்லும் மீனவர்கள் சாலை மிகவும் மோசமாக இருப்பதால் மீன்களை விற்பனைக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லும்போது மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    மேலும் இந்த கிராமத்தின் கடற்பகுதிக்கு அவ்வப்போது வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட கொடியம் பாளையம் தீவு கிராமத்துக்குரிய 500 மீட்டர் தூர சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள், மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×