என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
பஸ் மோதி வாலிபர் பலி
சீர்காழி அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில் வாலிபர் உயிரிழந்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன் பெருமாள் கோவில் கிராமத்தில் சீர்காழியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு பஸ் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பட்டுக்கோட்டையைச் சேர்ந்த பெருமாள் மகன் பாஸ்கரன் (25) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சிவபால்சிங் என்பவர் படுகாயத்துடன் சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப் பட்டுள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தொடர் விபத்து காரணமாக அவ்விடத்தில் தடுப்பு அமைக்க கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்தில் உயிரிழந்த பாஸ்கரன் உடலை கைப்பற்றிய வைத்தீஸ்வரன் கோயில் போலீசார் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். மேலும் வழக்கு தொடர்பாக அரசு பேருந்தை பறிமுதல் செய்து அதன் ஓட்டுனரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story






