search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தீப்பெட்டி
    X
    தீப்பெட்டி

    ஏப்ரல் 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூட முடிவு

    மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக ஏப்ரல் 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூட முடிவு செய்துள்ளனர். இதற்கு கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.
    கோவில்பட்டி:

    தமிழகத்தில் 50 முழு எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருட்களான பாஸ்பரஸ், குளோரைட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்து பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ரூ. 1-க்கு விற்பனை செய்யப்பட்ட தீப்பெட்டியின் விலையை ரூ .2ஆக உயர்த்தினர். இது ஓரளவுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு கை கொடுக்க தொடங்கி வரும் நிலையில் கடந்த 3 மாதங்களில் மீண்டும் தீப்பெட்டி உற்பத்தி மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை கடுமையாக உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மேலும் நெருக்கடியை சந்திக்க தொடங்கினர்.

    இதையெடுத்து கடந்த 22-ந் தேதி நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் 600 தீப்பெட்டி கொண்ட பண்டல் விலையை ரூ.300 இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஏப்ரல் 1 முதல் இந்த விலை நடைமுறைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

    ஆனால் இந்த முடிவினை மொத்த வியாபாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் இது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதை தொடர்ந்து தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலை அதிகரித்து வருவதால் பல்வேறு இழப்புகளை சந்தித்து வரும் நிலை உள்ளது. எனவே ஏப்ரல் 6-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை ஆலைகளை மூடி உற்பத்தியை நிறுத்த முடிவு செய்வது என்றும், சீனாவில் இருந்து இந்தியாவிற்கு அதிகளவில் வரும் லைட்டர்களை மத்திய அரசு தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    வரும் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து ஆலைகளையும் மூட முடிவு செய்துள்ளனர். இதற்கு கோவில்பட்டி லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

    இது குறித்து நே‌ஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், மூல பொருள்களின் கட்டுப்பாடு இல்லாத விலையேற்றத்தின் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியின் அடக்க விலை பன்மடங்கு உயர்ந்து விட்ட காரணத்தினால் வரும் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் ஒரு நாளைக்கு ரூ.7 கோடி உற்பத்தி பாதிப்பு ஏற்படும். நேரிடையாக, மறைமுகமாக 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றார்.

    Next Story
    ×