என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட அரவிந்தன்
சிவகாசி அருகே பழிக்கு பழியாக வாலிபரை வெட்டிக்கொன்ற கும்பல்: கொலையாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு
மோட்டார் சைக்கிளில் வந்தபோது, கும்பல் ஒன்று வழிமறித்து தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் என்ற வாலிபர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சேனையாபுரம் காலனியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் அரவிந்தன் (வயது 28). சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த இவர் நேற்று சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டிக்கு வேலைக்கு சென்றார்.
பின்பு அங்கிருந்து தனது நண்பரான சிவகாசி மருதுபாண்டியர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அரவிந்தன் ஓட்டி வந்துள்ளார்.
அவர்கள் இருவரும் கள்ளப்பட்டி பகுதியில் வந்தபோது அங்கு மறைந்திருந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது. பின்பு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அரவிந்தனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவர்களை தடுத்த துரைப்பாண்டிக்கும் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அரவிந்தன் அந்த கும்பலிடம் இருந்து தப்புவதற்காக அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அவரை விடாமல் துரத்திச்சென்று சோளக்காட்டுக்குள் சுற்றி வளைத்து வெட்டியது. இதில் படுகாயமடைந்த அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், இன்ஸ்பெக்டர் மலையரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்பு அரவிந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அரவிந்தன் கொலை செய்யப்பட்டது குறித்து அவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர் துரைப்பாண்டி எம்.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட அரவிந்தன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் நவநீதகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் ஏதாவது முன் விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
அதில் நவநீதகிருஷ்ணன் கொலைக்கு பழிக்கு பழியாகவே அரவிந்தன் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு தகவல் வெளியானது. நவநீதகிருஷ்ணன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டுள்ளார். அதில் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் அரவிந் தனை பழி தீர்க்க திட்ட மிட்டிருந்ததாக தெரிகிறது.
அதன்படி நேற்று தனது நண்பருடன் வந்த அரவிந்தனை அருண் பாண்டியன், பார்த்திபன், மதன், பழனிசெல்வம் மற்றும் சிலர் கும்பலாக வந்து வெட்டிக்கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது போலீசார் கொலை மற்றும் கொலைமுயற்சி வழக்கு பதிந்துள்ளனர்.
தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை வலைவீசி தேடிவருகின்றனர்.
Next Story






