என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊஞ்சலூர் மாரியம்மன் குண்டம் திருவிழாவில் கரகம் எடுத்து பகதர் குண்டம் இறங்கிய போது எடுத்தப்படம்
ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா
கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் காவிரி கரையோரம் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், குண்டம் இறங்குதல், திருத்தேர் வடம்பிடித்தல் திருவிழா நடைபெறும்.
கொடுமுடி:
கொடுமுடி அருகே ஊஞ்சலூரில் காவிரி கரையோரம் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல், குண்டம் இறங்குதல், திருத்தேர் வடம்பிடித்தல் திருவிழா நடைபெறும்.
இந்த ஆண்டும் கடந்த 8-ந்தேதி பூச்சாட்டுதலுடன் திருத்தேர்விழா தொடங்கி நடந்து வந்தது. அன்றைய தினமே கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அன்றிலிருந்து தினமும் பெண்கள் அதிகாலை காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி ஈர உடையுடன் குடத்தில் நீர் எடுத்து வந்து கம்பத்துக்கு ஊற்றி வழிபட்டு வருகின்றனர்.
13-ந்தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 14-ந்தேதி கொடியேற்றம், கிராம சாந்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
இதையொட்டி பெண்கள் அனைவரும் வீடுகளில் இருந்து தட்டுகளில் பூக்கள் கொண்டு வந்து அம்மனுக்கு முன்பு கொட்டி வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து அம்மனுக்கு மஹா தீபாராதனை காட்டப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் அன்று அம்மனை வழிபட்டனர். அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் அறுபது அடி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சுமார் 50-க்கு மேற்பட்டவர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஈர உடையுடன் கரகம் எடுக்கும் முறைதாரர் முன் வர கோவிலுக்கு வந்தனர்.
கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்டு இருந்த குண்டத்தில் கரகம் எடுக்கும் முறைதாரர் முதலில் இறங்க அதனை தொடர்ந்து பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர். இன்று மாலை திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Next Story






