search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூத்ததேவி சிலை
    X
    மூத்ததேவி சிலை

    காஞ்சிபுரம் அருகே 1,200 ஆண்டுகள் பழமையான மூத்ததேவி சிலை கண்டுபிடிப்பு

    கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஆற்பாக்கம் கிராமம் உள்ளது. இங்குள்ள பிடாரி கோயில் செல்லும் வழியில் உள்ள காவாங்கரையில் தலைகள் மட்டுமே தெரிந்தபடி கற்சிலைகள் புதைந்து இருந்தது.

    இதனை பொதுமக்கள் பத்திரமாக தோண்டி எடுத்து சுத்தம் செய்தனர். அந்த சிலையை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவைஆதன் ஆய்வு செய்தார்.

    அப்போது இந்த கற்சிலை பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்த தேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலை என்பதும் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதும் தெரிந்தது.

    மூத்ததேவி எனப்படும் ஜேஷ்டாதேவி சிலையானது 4 அடி உயரத்தில் 3 அடி அகலத்தில் தனது மகன் மாந்தன் மற்றும் மகள் மாந்தியுடன் மூவரும் அமர்ந்தநிலையில் கரண்டமகுடத்துடன் கண்ணைக் கவரும் வகையில் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆபரணங்கள் மற்றும் ஆடைகளுடன் காணப்படுகிறது.

    மூத்த தேவியின் வலப்பக்கம் மாட்டுத் தலை கொண்ட அவரது மகன் மாந்தன் கையில் ஆயுதத்துடனும், இடப்பக்கம் அவரது மகள் மாந்தியும் வீற்றிருக்கிறார்கள்.

    மூத்த தேவி தலையின் வலப்பக்கம் தூய்மையின் அடையாளமான துடைப்பமும், வலப்பக்கம் அவரின் சின்னமான காக்கை கொடியும் உள்ளது.

    மூத்த தேவியுடைய தலையில் கரண்ட மகுடமும் காதில் பத்ர குண்டலமும் கழுத்தில் சரப்பளி ஆபரணமும் தோல்களில் வாகு வளையங்களும் கைகளில் வளையல்களும் பருத்த வயிறோடு விரிந்த கால்களும் இடையில் இருந்து பாதம் வரை நீண்ட அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த ஆடையோடு புன்னகையான முகத்துடன் அழகிய புடைப்பு சிற்பமாக காட்சியளிக்கிறது.

    தமிழகத்தில் தொண்டை மண்டலமாக இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகமான மூத்த தேவி சிலைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த சிலையில் மூத்த தேவியினுடைய மகனும் மகளும் பெரிய உருவமாக அவருக்கு இணையாக காட்டப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.

    மூத்த தேவியின் இடக்கரம் தன்னுடைய மகள் மாந்தியின் இடையில் அணைத்த வண்ணம் உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

    ஆற்பாக்கம் கிராமம் என்பது சைவம், வைணவம், பவுத்தம், சமணம் ஆகிய சமயங்கள் செழிப்புடன் வளர்ந்திருந்த ஊராகும். அந்த ஊரின் பழமையை பறைசாற்றும் வகையில் இந்த சிற்பம் அமைந்துள்ளது

    மூத்த தேவிக்கு தவ்வை ஜேஷ்டாதேவி என பல பெயர்கள் உண்டு. இவர் திருமாலின் மனைவியான லட்சுமி தேவியின் மூத்த சகோதரி ஆவார். இவர் குறித்த தகவல் சங்க இலக்கியங்களில் மற்றும் திருவள்ளுவர் அவ்வையார் போன்ற பெரும் புலவர்களும் குறிப்பிட்டுள்ளனர்.

    பல்லவர் காலத்தில் வழிபாட்டின் உச்சத்தில் இருந்த இந்த தாய் தெய்வம் நந்திவர்ம பல்லவனின் குலதெய்வமாக இருந்துள்ளது. இதனால் பல்லவர்கால ஆலயங்களில் வீற்றிருப்பார். சில கோயில்களில் இவருக்கென்று தனி சன்னதியும் இருந்துள்ளது. பிற்கால சோழர் காலத்திலும் வழிபாட்டில் தொடர்ந்த இந்ததெய்வம் வளமையின் அடையாளமாக குழந்தைப்பேறு தருபவளாக செல்வவளம் பெருக்குபவளாக போற்றப்பட்டாள்.

    நாளடைவில் மூத்ததேவி என்பது மருவி மூதேவி ஆக வழக்கில் வந்து வழிபாடு இல்லாமல் போய் உள்ளது. இது பல்லவர்களின் இறுதிக் காலத்தை சார்ந்ததாகும்.

    காஞ்சிபுரம் பல்லவர்களின் தலைநகரமாக அவர்களது ஆட்சியின் கீழ் இருந்த நகரமாகும். எனவே இந்த மாவட்டம் முழுவதும் பல்லவர்களின் வரலாற்று எச்சங்கள் இன்றும் பல இடங்களில் காணப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×