என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILE PHOTO
வாகன விபத்தில் 2 பேர் பலி
பைக் மீது கார் மோதியதில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 47) நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தனக்கு சொந்தமான காரில் குடும்பத்தினருடன் திருச்சியில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
கார் அறந்தாங்கி & புதுக்கோட்டை சாலையில் எரிச்சி அருகே வரும் போது எதிரே ஒத்தக்கடையை சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரை ஓட்டி வந்த சண்முகநாதன் அவரது மனைவி விஜயலெட்சுமி (45) மகன் பார்த்திபன் (17) ஆனந்தமூத்தி மனைவி அமுதா (52) மாரிமுத்து மகன் பாலசிதம்பரம் (16) பைக் ஓட்டி வந்த சேகர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதில் சண்முகநாதன் மகன் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அமுதா உயிரிழந்தார். மற்றவர்கள் அறந்தாங்கி, திருச்சி உள்ளிட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






