என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் கிரீன் சர்க்கிளில் நேற்று இரவு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்.
வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு என்ன?
வேலூரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர்:
வேலூரில் புகழ்பெற்ற சி.எம்.சி. ஆஸ்பத்திரி, தங்க கோவில், வி.ஐ.டி பல்கலைக் கழகம் மற்றும் பல கல்வி நிறுவனங்கள், சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக உள்ளன.
சென்னை, பெங்களூர் மெட்ரோ நகரங்களுக்கு இடையில் பெரிய மாநகரமாக வேலூர் உள்ளது. வேலூரிலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பஸ், ரெயில் போக்குவரத்து உள்ளது.
வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சிகிச்சைக்காகவும், தங்க கோவில் மற்றும் சுற்றுலாத் தலங்களை காண ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதனால் வேலூர் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது இதனால் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை மார்க்கமாக செல்லும் பஸ்கள் மட்டும் இயக்கப்படுகின்றன பிற இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் பழைய பஸ் நிலையம் மற்றும் புதிய மீன் மார்க்கெட் அருகே இருந்து இயக்கப்படுகிறது.
மக்கள் தொகையும், வாகன எண்ணிக்கையும் அதிகரித்து வரும் அளவிற்கு வேலூரில் புதிதாக பாலமோ, சாலை அமைப்போ ஏற்படுத்தவில்லை. இதனால் வேலூரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேஷனல் தியேட்டர் சர்க்கிள் கிரீன் சர்க்கிள் வரை வாகனங்களின் அணிவகுப்பு தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. பழைய பஸ் நிலையத்தை ஒட்டியுள்ள மண்டி வீதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான சாலைகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து போலீசாரும் அடிக்கடி போக்குவரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி வந்தாலும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியவில்லை. அண்ணா சாலையில் இருந்து காட்பாடி, சத்துவாச்சாரி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மக்கான் சிக்னலில் திரும்பாமல் பழைய பைபாஸ் சாலையில் செல்லுமாறு போக்குவரத்து மாற்றம் செய்தனர். இதிலும் நெரிசலுக்கு நிரந்த தீர்வு காணவில்லை.
சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து போலீசாரால் நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.
எனவே போக்குவரத்து போலீசார் சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்தன. நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமானோர் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தனர். மேலும் வேலூர் மாநகரை சேர்ந்தவர்களும் விஷேசங்களுக்கு செல்வதற்காக வாகனங்களில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வேலூர் அண்ணா சாலை, கிரீன் சர்க்கில், சத்துவாச்சாரி, சேண்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் போக்குவரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி திணறின. சுமார் 3 மணி நேரம் வாகனங்களின் நடுவில் சிக்கிக்கொண்டு வாகன ஓட்டிகள் எந்த பக்கம் செல்வது என தெரியாமல் திணறினர். போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிபிட்ட இடத்திற்கு செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.
சாலை வசதி மற்றும் புதிதாக பாலங்கள் அமைக்காவிட்டால் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணமுடியாது. வேலூர் இதய பகுதியான கிரீன் சர்க்கிளே போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய பகுதியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என்றால் கிரீன் சர்க்கிளுக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கை குறைக்க வேண்டும். அதற்கு புதிதாக 3 இடங்களில் பாலம் அமைத்தால் தீர்வு காணப்படலாம்.
நேஷ்னல் சிக்னலில் இருந்து பெட்ரோல் பங்க் வழியாக செல்லும் சாலை 6 வழிச்சாலையில் முட்டும் இடத்தில் சுரங்கப்பாலம் அமைத்து புதிய காட்பாடி பாலாற்று பாலத்துடன் இணைக்க வேண்டும். அவ்வாறு அதில் சுரங்கப்பாதை அமைத்தால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிளுக்கு செல்லாமல் புதிய பஸ் நிலையம் மற்றும் காட்பாடிக்கு செல்லலாம். அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகளை செய்து வரும் நிலையில் இந்த சுரங்கப்பாதையும் அமைத்தால் நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். வேலூர் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி. ஆபீஸ் சாலை வழியாக பாலாற்றில் புதிதாக தரைப்பாலம் அமைத்து காங்கேயநல்லூர் ரவுண்டானாவை இணைக்க வேண்டும்.
இதனால் ஆந்திரா, காட்பாடி பகுதியில் இருந்து வாகனங்கள் கிரீன் சர்க்கிள் செல்லாமல் சத்துவாச்சாரியை அடைந்து சென்னை, ராணிப்பேட்டை, வாலாஜாவுக்கு செல்லலாம். இதே வழியை சத்துவாச்சாரியில் இருந்து காட்பாடிக்கு செல்பவர்களும் பயன்படுத்துவார்கள்.
காங்கேயநல்லூர், சத்துவாச்சாரி தரைப்பாலம் அமைப்பதில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் ரங்காபுரம் பஸ் டெப்போ எதிரில் இருந்து பிரம்மபுரத்தை இணைக்கும் வகையில் பாலாற்றில் பாலம் அமைக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. பாலம் கட்ட நீண்ட பாலம் பிடிக்கும் என்பதால் அதற்கு முன்பாக தரைப்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் சேண்பாக்கம் ரெயில்வே பாலத்தையொட்டி புதிதாக ஒரு பாலம் அமைத்தால் காட்பாடி, ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்கள் கிரீன் சர்க்கிள் வராமல் செல்லலாம்.
வேலூர், மக்கான் சிக்னலில் இருந்து நேஷனல் சிக்னல் வரை பாலம் அமைக்கும் திட்டம் தீட்டப்பட்டு கிடப்பில் உள்ளது. அதனை செயல்பாட்டு கொண்டு வந்தால் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கலாம்.
புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு முன்பே கிரீன் சார்க்கிள் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் மேலும் வாகன எண்ணிக்கையும் அதிகரித்து பெரும் அளவில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ந்து வரும் மாநகரத்தில் புதிதாக பாலம் கட்டாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
Next Story






