search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    பவானிசாகர் அருகே காட்டுபன்றி மோதி பனியன் வியாபாரி பலி

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே காட்டுபன்றி மோதியதில் பனியன் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    பு.புளியம்பட்டி:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார் (38). பனியன் வியாபாரி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரம் தொடர்பாக நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதிக்கு வந்தார்.

    பின்னர் இங்கு வேலைகளை முடித்துக் கொண்டு மீண்டும் இரவு 7 மணியளவில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். அவர் சத்தியமங்கலம்- மேட்டுப்பாளையம் மெயின் ரோடு விளாமுண்டி வனப்பகுதியையொட்டிய சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டுப்பன்றி வேகமாக சாலையை கடக்க முயன்றது. அப்போது ராம்குமார் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத வகையில் காட்டுபன்றி மோதியது. மேலும் முன்பக்க டயரில் சிக்கிய காட்டுபன்றி சுமார் 10 அடி தூரத்துக்கு இழுத்து சென்றது.

    இதையடுத்து நிலைதடுமாறிய ராம்குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராம்குமார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். மேலும் வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் காட்டுபன்றியும் படுகாயம் அடைந்து அதே இடத்தில் மயங்கி கிடந்தது.

    இந்த சம்பவம் பற்றி தெரியவந்ததும் வனத்துறையினர் மற்றும் பவானிசாகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டுபன்றி மோதியதில் பலியான ராம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயம் அடைந்த காட்டுபன்றியை வனத்துறையினர் கொண்டு சென்றனர். அவர்கள் கொண்டு சென்ற சிறிது நேரத்தில் காட்டுபன்றியும் இறந்தது. இந்த விபத்து குறித்து பவானி சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×