search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாகர்கோவிலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் கடத்தி கொலை

    நாகர்கோவிலை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மகன் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சியோன் தெருவை சேர்ந்தவர் செல்லப்பன் (வயது56). கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும் அயக்கோடு ஊராட்சி தலைவராகவும் இருந்து வருகிறார். இவரது மகன் லிபின்ராஜா (23).  ஆந்திராவில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 4-ந் தேதி இரவு 8 மணியளவில் கடைக்கு சென்று விட்டு வருவதாக கூறி பைக்கில் லிபின்ராஜா வெளியே சென்றார். அதன் பின்னர் நீண்ட நேரமாக திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர் நண்பர்கள் வீடுகளிலும், உறவினர் வீடுகளிலும் லிபின்ராஜாவை தேடினார்கள். ஆனால் லிபின்ராஜா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து அவரது தந்தை செல்லப்பன், நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குபபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், லிபின்ராஜாவுக்கும், நாகர்கோவில் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிலருக்கும், கடந்த 2021-ம் ஆண்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. எனவே அந்த நபர்கள் லிபின்ராஜாவை கடத்திச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

    லிபின்ராஜாவின் நண்பர்கள் சிலரை பிடித்தும் தனிப்படை போலீசார் விசாரித்தனர். அப்போது லிபின்ராஜாவை அவரது நண்பர்கள் சிலர் அழைத்துச் சென்றது தெரிய வந்தது. அந்த நண்பர்களை போலீசார் தேடினார்கள். அவர்கள் தலைமறைவாகி இருந்தனர்.

    இதனால் லிபின்ராஜாவின் கதி என்னவென்று தெரியாமல் இருந்தது. தனிப்படை போலீசார் தொடர்ந்து ரகசிய விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    இந்த நிலையில் குமரி மாவட்ட எல்லையான பழவூர் 4 வழிச்சாலையோரம் உள்ள சானல் கரை ஓரத்தில் வாலிபர் ஒருவர் கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் லிபின்ராஜா கொன்று புதைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து லிபின்ராஜாவின் தந்தை செல்லப்பனும் அங்கு சென்றார்.

    கொலை செய்து புதைக்கப்பட்டிருப்பது தனது மகன் லிபின்ராஜா என்பதை உறுதி செய்தார். இதையடுத்து இன்று காலை தாசில்தார் முன்னிலையில் பிணம் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
    லிபின்ராஜாவை கடத்தி வந்து கொலை செய்த கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    அ.தி.மு.க. பிரமுகர் மகன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×