என் மலர்
உள்ளூர் செய்திகள்

புஷ்பா மதுபாலா
குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டியில் பெற்ற மகளை தள்ளி கொன்று தாய் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டியில் பெற்ற மகளை தள்ளி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேன்கனிக்கோட்டை:
தளி அருகே குடும்ப தகராறில் தண்ணீர் தொட்டியில் மகளை தள்ளி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி புஷ்பா (வயது27). இவர்களுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மதுபாலா (5) என்ற மகள் இருந்தாள்.
இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த புஷ்பா தனது மகள் மதுபாலாவுடன் வீட்டின் அருகே உள்ள 16 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றார்.
பின்னர் மகளை தொட்டியை எட்டி பார்க்குமாறு புஷ்பா கூறி உள்ளார். இதனால் மதுபாலா தொட்டியை எட்டி பார்த்தாள். அப்போது மகள் என்று கூட பாராமல் அவளை தொட்டிக்குள் தள்ளி புஷ்பா கொன்றார். பின்னர் அவரும் தொட்டியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே தண்ணீரில் மூழ்கி பலியான 2 பேரும் தொட்டியில் பிணமாக மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அவர்கள் தளி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தற்கொலை சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் குடும்ப தகராறு காரணமாக மகளை தண்ணீர் தொட்டியில் தள்ளி கொன்று விட்டு தாயும் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
Next Story






