என் மலர்
உள்ளூர் செய்திகள்

.
பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவி: தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேரூராட்சியில் தலைவர் தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டவர் வெற்றி பெற்றார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், நாகோஜன அள்ளி, பர்கூர், ஊத்தங்கரை ஆகிய 6 பேரூராட்சிகள் உள்ளன.
இந்த நிலையில் இந்த 6 பேரூராட்சிகளிலும் தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
காவேரிப்பட்டணம் பேரூராட்சி தலைவராக தி.மு.க. வை சேர்ந்த அம்சவேணி செந்தில்குமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். நாகோஜன அள்ளி பேரூராட்சி தலைவராக வி.சி.தம்பிதுரை போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை பேரூராட்சி தலைவராக தி.மு.க.வை சேர்ந்த அமானுல்லா வெற்றி பெற்றார்.
தேன்கனிக்கோட்டையில் பேரூராட்சி தலைவராக 18&வது வார்டு கவுன்சிலர் டி.ஆர்.சீனிவாசன், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் பர்கூர் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் வேட்பாளராக செந்தாமரை பாலன் நிறுத்தப்பட்டு இருந்தார்.
இதையொட்டி இன்று காலை நடந்த தலைவர் தேர்தலில் செந்தாமரை பாலனை எதிர்த்து தி.மு.க. வை சேர்ந்த சந்தோஷ்குமார் போட்டியிட்டார். கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து போட்டி நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்ட சந்தோஷ்குமார் வெற்றி பெற்றார்.
கெலமங்கலம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு தி.மு.க. வேட்பாளராக உமா நிறுத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று நடந்த தேர்தலில் உமாவை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் கே.பி.தேவராஜ் மனு செய்தார். இதில் உமா தலைவர் பதவிக்கு மனு செய்ததால் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.தேவராஜ் பேரூராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க. வேட்பாளர் உமா, தலைவர் பதவிக்கு போட்டியிடாதது குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தி.மு.க. சார்பில் தலைவர் பதவிக்கு நிறுத்தியிருந்த உமாவும், தற்போது தலைவர் பதவியில் வெற்றி பெற்ற கே.பி.தேவராஜிம் உடன்பிறந்த அண்ணன்- தங்கை ஆவார்கள்.
இதனால் கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவியை தனது அண்ணனுக்காக உமா, விட்டு கொடுத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெலமங்கலம் பேரூராட்சி தலைவர் பதவி பறிபோனதால் தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் எதிர்பாராத திருப்பமாக தலைவர் பதவியை கைப்பற்றியதால் அ.தி.மு.க.வினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






