என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் மேயராக தி.மு.க.வை சேர்ந்த சுஜாதா போட்டியின்றி தேர்வு
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.
தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.48 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.
கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த சுஜாதா மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.
மேயர், துணை மேயர் தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.






