என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அருள்பாலித்தார்.
அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை உற்சவம்
திருச்சம்பள்ளி அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயானக் கொள்ளை விழா நடைபெற்றது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் அருகே திருச்சம்பள்ளி கிராமத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் மயான கொள்ளை விழா நடைபெற்றது.
மாசி மாத அமாவாசையில் ஆண்டுதோறும் நடைபெறும் மயானக் கொள்ளை உற்சவத்தின் போது பக்தர்களால் வழங்கப்படும் வேகவைத்த தானியங்களை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். பிரசித்திப்பெற்ற இந்தக் கோவிலில் இந்த ஆண்டு மயானக் கொள்ளை உற்சவம் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது.
இதையொட்டி காலை கலச பூஜை, கணபதி பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியான மயானக்கொள்ளை உற்சவத்தையொட்டி மதியம் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்ட்டது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுடன் சிறப்பு அலங்காரத்துடன் அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதியுலா நடந்தது. தொடர்ந்து மாலை கோவிலின் எதிரே அமைந்துள்ள மயானத்தில் அம்மன் எழுந்தருளினார். அப்போது மயானத்தில் வாழை இலையில் வேகவைத்து கொட்டப்பட்டிருந்த சர்க்கரை வள்ளி கிழங்கு, சவாரிகட்ட கிழங்கு, பயறு, உளுந்து, காராமணி பயறு, உள்ளிட்ட தானியங்களை பக்தர்கள் வாரி இரைக்கும் (கொள்ளையடிக்கும்) நிகழ்ச்சி நடந்தது.
இதை உட்கொள்ளும் பக்தர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், பில்லி சூனியம் அகலும் என்பது ஐதீகம். தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி மற்றும் புராண நாடகம் நடைபெற்றன. முன்னாள் அறங்காவலர் சின்னதுரை, பிரகாஷ், குலதெய்வம் குடும்பதார்கள் கிராமவாசிகள் மற்றும் சுற்று வட்டார பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






