என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 60 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
வேலூர் மாநகராட்சியில் வெற்றி பெற்ற 60 வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா இன்று நடந்தது.
வேலூர்:
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் கடந்த 22-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் கவுன்சிலர்களாக பதவியேற்பு நிகழ்ச்சி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் இன்று நடந்தது.
வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது. தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
கவுன்சிலர் பதவி ஏற்பு விழாவை ஒட்டி மாநகராட்சி அலுவலகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
புதிய வண்ணத்துடன் அலங்காரங்களுடன் புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. பதவியேற்பு விழாவிற்கு மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்தனர்.இதனால் மாநகராட்சி கூட்ட அரங்கு நிரம்பி வழிந்தது.
வேலூர் மாநகராட்சியில் தற்போது 30 பெண் கவுன்சிலர்கள் தேர்ந்தெ டுக்கப்பட்டுள்ளனர். இதனால் பெண்கள் ஒருபுறமும் ஆண்கள் ஒரு புறமும் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்தனர்.
1&வது வார்டு முதல் வரிசையாக. கவுன்சிலர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது கலைஞர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரிலும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா பெயரில் ஆணையிட்டு பதவி ஏற்றுக்கொண்டனர்.
பதவி ஏற்பு விழா நடந்த அரங்கத்தில் அனைவரும் செல்ல முடியாது என்பதால் மாநகராட்சி அலுவலகத்திற்கு வெளியே பந்தல் அமைக்கப்பட்டு 2 இடங்களில் பெரிய திரைகளில் பதவி ஏற்பு விழா நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதன் மூலம் வெளியே இருந்தவர்கள் பதவியேற்பு விழாவை கண்டு களித்தனர்.
மேலும் பதவி ஏற்பு விழா நடந்த கூட்ட அரங்கில் அரசியல் கட்சியினர் ஏராளமானோர் குவிந்தனர்.
இதனால் அரங்கம் முழுவதும் சலசலப்பு கேட்டுக்கொண்டே இருந்தது.இந்த சத்தத்திற்கு இடையில் கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
பெண் கவுன்சிலர்கள் பதவி ஏற்கும்போது அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்று பதவி ஏற்றுக் கொண்டனர். மாநகராட்சி கூட்ட அரங்கில் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர்.
தேவியக்கா கொண்ட கவுன்சிலர்கள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். அவர்களுக்கு நண்பர்கள் உறவினர்கள் மாநகராட்சி அலுவலகம் வந்து வாழ்த்து தெரிவித்தனர் இதனால் மாநகராட்சி அலுவலகம் கோலாகலமாக காட்சி அளித்தது.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் தயார் செய்துள்ளனர். 4-ந்தேதி அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சட்டத்தை "சட்டை 'என்று உச்சரித்த கவுன்சிலர்கள்
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அப்போது இந்திய அரசியலமைப்பு சட்டப்படி என்று வாசிக்கும்போது சட்டத்தை சட்டை என்றே கவுன்சிலர்கள் சிலர் வாசித்தனர். இதனால் கூட்டரங்கில் சிரிப்பலை எழுந்தது.
Next Story






