என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
போலி தங்க காசு விற்பனை செய்த 2 பேர் கைது
போலி தங்க காசு விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே தங்கமுலாம் பூசப்பட்ட போலி தங்க காசுகளை விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் அருகே லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் வரதராஜன் (வயது38). கடந்த 16-ந்தேதி பெரம்பலூரில் உள்ள அட்டிகா கோல்டு கம்பெனியின் கிளைக்கு சென்று உதவி மேலாளர் விஜய சாந்தியிடம் 8 கிராம் எடையுள்ள 23 தங்க காசுகளை விற்பனை செய்து, அவரிடமிருந்து ரூ. 8 லட்சத்து 30 ஆயிரம் பணம் பெற்றார்.
23 தங்கக் காசு களையும் பெங்களூரு பிரதான கம்பெனிக்கு அனுப்பி அங்கு பரிசோதித்த போது தங்க முலாம் பூசப்பட்ட போலியான காசுகள் என்று தெரியவந்தது. அட்டிகா கோல்டு கம்பெனி மேனேஜர் (பொ) பழனிச்சாமி கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் போலி தங்க காசுகளை விற்ற வரதராஜனை பிடித்து
அவரிடம் நடத்திய விசாரணையில், செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பாலமுருகன் (30) என்பவர் கொடுத்த ஆலோசனையின் பேரில் தங்க முலாம் பூசப்பட்ட காசுகளை விற்பனை செய்ததாக கூறினார்.
இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து போலி தங்க காசுகளை விற்பனை செய்த வரதராஜன், அவருக்கு உடந்தையாக இருந்த பாலமுருகன் ஆகியோர் 2 பேரை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story






