search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுவை சட்டசபை
    X
    புதுவை சட்டசபை

    புதுவை சட்டசபை நாளை கூடுகிறது

    மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு புதுவை சட்டசபையில் கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

    கடந்த செப்டம்பர் 2-ந்தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்தது. சட்டசபையை 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளதால் மார்ச் 2-ந்தேதிக்குள் மீண்டும் சட்டசபையை கூட்ட வேண்டும்.

    இதற்காக நாளை (புதன்கிழமை) புதுவை சட்டசபை கூட்டப்படுகிறது. குளிர்கால கூட்டத்தொடர் என்ற அடிப்படையில் சட்ட மன்றம் கூட்டப்பட்டாலும், நாளை ஒரு நாள் மட்டுமே சபை நடைபெறும் என தெரிகிறது.

    இதனால் மக்கள் பிரச்சினைகள் பற்றி விவாதிக்க குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு சபையை நடத்த வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் மனு அளித்துள்ளது.

    நீட் தேர்வில் இருந்து விலக்கு, மின்துறை தனியார் மயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க.வினர் வலியுறுத்தி உள்ளனர்.

    வேலைவாய்ப்பின்மை, மழை நிவாரணத்தொகை உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

    இருப்பினும் சட்டசபை கூட்டம் நாளையுடன் முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சட்டசபையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து குரல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவாக காங்கிரசும் இணைந்து செயல்படும்.

    ஆட்சி அமைந்து 8 மாதமாகியும் ஆளும்கட்சி மற்றும் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படவில்லை. இதனால் எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் உள்ளனர். சட்டசபை கூட்டத்தில் இந்த அதிருப்தி வெளிப்படும் என தெரிகிறது.

    கடந்த கூட்டத்தொடரில் ரூ.9 ஆயிரத்து 900 கோடிக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் 50 சதவீதம் கூட அரசு துறைகள் செலவிடவில்லை என கூறப்படுகிறது.

    கடந்த 10 ஆண்டாக மார்ச் மாதத்தில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது.

    அதேநேரத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில் இந்த ஆண்டும் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும் நிலை உருவாகும்.
    Next Story
    ×