என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் நேற்று மாலை 6மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.
இதைத் தொடர்ந்து அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகராட்சிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஆரணி மார்க்கெட்டிலும், செய்யாறுநகராட்சிக்கு ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
அதேபோல செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கண்ணமங்கலம், போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு ரேணுகாம்பாள் கலைக் கல்லூரியிலும் சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.
வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுகிறார்கள்.
மேலும் சிசிடிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை மறுநாள் (22ஆம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப் படும்.
பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும்.நகராட்சிக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
Next Story






