என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியூர் அரசு பள்ளி வாக்குசாவடி மையத்தில் வாக்குபதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் புகார்
வேலூர் மாநகராட்சி 58-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் போராட்டம்
வேலூர் மாநகராட்சி 58-வது வார்டில் வாக்குப்பதிவு எந்திரம் மாற்றப்பட்டதாக வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் 1 மணி நேரத்திற்கு மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது
வேலூர்:
வேலூர் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடந்தது. ஏற்கனவே எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்த வாக்குபதிவு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்கள் வேட்பாளர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி 58-வது வார்டு அரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். அப்போது சுயேட்சை வேட்பாளர் ஒருவர் வாக்களிக்கச் சென்றார். அவர் வாக்குச்சாவடிக்கு சரியான முறையில் எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதை அவர் வைத்திருந்த பட்டியலில் சரி பார்த்தார்.
அப்போது அந்த வாக்குச் சாவடியில் வேறு எண் கொண்ட எந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதை கண்டதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தேர்தல் அதிகாரியிடம் அவர் விளக்கம் கேட்டார்.
தகவல் அறிந்த மற்ற வேட்பாளர்களும் வாக்குச்சாவடிக்கு வந்தனர், அப்போது அவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் ஓட்டு போட காத்திருந்தனர்.
மேலும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.வாக்குப்பதிவு எந்திரம் எப்படி மாறியது என்பது குறித்து வேட்பாளர்கள் அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அங்கு வந்தார்.
வேட்பாளர்கள் பெயர் சின்னம் ஒட்டுவதற்கு முன்பாக வெளியிடப்பட்ட பட்டியலை இங்குள்ள வேட்பாளர் கையில் வைத்துள்ளார். அதன்படி எந்திரங்கள் ஒதுக்கப்படவில்லை.
வேட்பாளர்கள் பெயர் சின்னம் ஒட்டிய பிறகு மீண்டும் கம்ப்யூட்டரில் குலுக்கல் முறையில் எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அந்த அடிப்படையில்தான் 58-வது வார்டுக்கு எந்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதுபற்றி அனைத்து வேட்பாளர்களிடம் முறையாக கையெழுத்து வாங்கி உள்ளதாகவும் தெரிவித்தனர்.
அப்போது வேட்பாளர் கள் கையெழுத்து வாங்கும் போது எந்திரம் மாற்றம் குறித்து தெரிவிக்காமல் வாங்கி விட்டீர்கள் எனவே இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே வைத்திருந்த எந்திரத்தை மூடி சீல் வைக்க கலெக்டர் உத்தர விட்டார்.அந்த எந்திரத்தில் 175 வாக்குகள் பதிவாகி இருந்தது. அப்படியே அந்த எந்திரம் மூடி சீல் வைக்கப்பட்டது. தொடர்ந்து புதிய வாக்குப்பதிவு எந்திரம் வரவழைக்கப்பட்டு தாமதமாக ஓட்டுப்பதிவு தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கையின் போது ஏற்கனவே 175 வாக்குகள் பதிவாகி இருந்த எந்திரம் 2-வதாக வைக்கப்பட்ட எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






