என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் வீட்டில் இருந்து பறக்கும் படை கைப்பற்றிய ரூ.10 லட்சம் லோன் பணமா? அதிகாரிகள் விசாரணை
திருவண்ணாமலையில் வீட்டில் இருந்து பறக்கும் படை கைப்பற்றிய ரூ.10 லட்சம் லோன் பணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் சிலர் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு தீவிரமாக ஈடுபட்டனர்.
வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படையினரும் ஒருபக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தேனிமலை பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த எதிர்தரப்பினர் ஒரு கட்சியின் வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவர்கள் ஒரு வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து வந்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த வீட்டில் இருந்த நபர்கள் அது லோன் வாங்கி வைத்திருந்த பணம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் மதியம் வரை சமர்ப்பிக்கபடாததால் அந்த பணத்தை நகராட்சி அலுவலர்கள் மூலம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் கூறுகையில்:&
வேட்பாளருக்காக ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அந்த பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தனரா ?அல்லது சொந்த செலவிற்காக வைத்திருந்தனரா? என்று முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Next Story






