என் மலர்
உள்ளூர் செய்திகள்

பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து தேரை இழுத்தனர்.
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் தேரோட்டம்
திருமணஞ்சேரி உத்வாகநாதர் கோவிலில் 200 ஆண்டுக்கு பிறகு மாசி மக பெருவிழா தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது.
தேவாரப்பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி அம்பிகையை கரம்பிடித்து திருமணம் செய்து கொண்டதால் இத்தலம் திருமணஞ்சேரி என்று அழைக்கப்படுகிறது.
திருமணமாகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளை பூஜித்து வேண்டிக் கொண்டால் உடனே திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் மாசி மக பெருவிழா
200 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெறுகிறது.
இவ்விழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு ஹோமங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் வீதிஉலா காட்சி நடைபெற்ற நிலையில் 9-ஆம் நாள் திருவிழாவான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கோகிலாம்பாள் சமேத கல்யாண சுந்தரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்துடன் திருநடனம் புரிந்தவாறு வந்து தேரில் எழுந்தருளினார்.
அதனைத் தொடர்ந்து தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது.
தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி, தக்கார் இளையராஜா மற்றும் கோவில் ஊழியர்கள்
செய்திருந்தனர்.
இவ்விழாவினை தொடர்ந்து இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






