search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்குப்பதிவு எந்திரம்
    X
    வாக்குப்பதிவு எந்திரம்

    தேர்தல் பணியில் 1.33 லட்சம் பணியாளர்கள்- ஓட்டுப்பதிவுக்கு ஏற்பாடுகள் தயார்

    கொரோனா தொற்று பரவுவதால் வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முககவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    சென்னை:

    சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சி அமைப்புகளுக்கு நாளை மறுதினம் (19-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தல் பிரசாரம் இன்று ஓயும் நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கடைசி ஒருமணி நேரம் (5 மணி முதல் 6 மணிவரை) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

    கொரோனா தொற்று பரவலுக்கு இடையே இத்தேர்தல் நடைபெறுவதால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்த தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க 31,029 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளில் சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காளி மற்றும் உதவி செய்வதற்கு ஊழியர் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மேலும் கொரோனா தொற்று பரவுவதால் வாக்குச்சாவடிகளில் வெப்பமானி, கிருமிநாசினி, முககவசம், கையுறைகள், பாதுகாப்பு கவசம், பஞ்சு போன்றவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் 1 லட்சத்து 33 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களுக்கான பயிற்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 649 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 1,644 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

    தேர்தல் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்களுக்கு நாளை அதற்கான பணி ஆணை வழங்கப்படுகிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சுமார் 55 ஆயிரத்து 337 கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    அவை பரிசோதனைக்கு பின்னர் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றன. மேலும் தேர்தல் சுதந்திரமாகவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டி.வி.. கேமரா பொருத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவின்போது எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கையாக பதட்டமான வாக்குச்சாவடிகளில் வீடியோ கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நுண்பார்வையாளர்கள் தேர்தல் களத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×