search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர்
    X
    அண்ணாமலை முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர்

    மணலியில் இன்று காலை பிரசாரத்தின்போது பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர்

    பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படையான் தே.மு.தி.க.வில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திலும் இருந்துள்ளார்.
    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது.

    தி.மு.க. கூட்டணி அமைத்தும், அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்தனியாகவும் களத்தில் உள்ளன.

    இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நாளை மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை மாநகராட்சி 20-வது வார்டில் தே.மு.தி.க. சார்பில் வேம்படியான் போட்டியிட்டார். அவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மணலி பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    மணலி பெரிய தோப்பு பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது தே.தி.மு.க. வேட்பாளர் வேம்படியான் தனது ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் அங்கு வந்தார்.

    அவர் அண்ணாமலையை வேனில் ஏறி சந்தித்து பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக தெரிவித்தார். பின்னர் அண்ணாமலைக்கு சால்வையும் அணிவித்தார். இதனால் தேர்தல் பிரசாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    பா.ஜனதாவில் இணைந்த வேம்படியானுக்கு அண்ணாமலையும், கட்சி நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்னர் அண்ணாமலை தொடர்ந்து வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவருடன் இணைந்து வேம்படியானும் பா.ஜனதாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

    பா.ஜனதாவில் இணைந்தது குறித்து வேம்படியான் கூறும் போது, தே.மு. தி.க நல்ல கட்சி. கேப்டன் விஜயகாந்த் களத்தில் இல்லாததால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றார்.

    பா.ஜனதாவில் இணைந்த தே.மு.தி.க. வேட்பாளர் வேம்படியான் தே.மு.தி.க.வில் தலைமை பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக விஜயகாந்தின் ரசிகர் மன்றத்திலும் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவர் பா.ஜனதாவில் இணைந் திருப்பது தே.மு.தி.க. நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    மணலி சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் பா.ஜ.க. வேட்பாளரை ஆதரித்து அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    505 தேர்தல் அறிக்கைகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் கூறியவற்றை நிறைவேற்றவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் நேரடிப் பிரச்சாரம் செய்ய முதல்வருக்கு தைரியம் இல்லை.

    நீங்கள் வாக்குறுதிகள் என்னாச்சு என்று கேட்பீர்கள் என்ற பயத்தால் காணொலி காட்சி மூலம் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தி.மு.க.விற்கு ஒரு கரும் புள்ளி வைக்க வேண்டும். சென்னை தி. மு.க.வின் கோட்டை என்பார்கள். அந்த கோட்டையில் பா.ஜ.க. ஓட்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

    சென்னை இப்போது ஒரு மோசமான நிலையில் உள்ளது. மத்திய அரசு ஏராளமான திட்டங்களுக்காக நிதி ஒதுக்குகிறது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக பணம் ஒதுக்கினார்கள். ஆனால் அந்த பணம் என்ன ஆனது. 70 ஆண்டுகளாக சென்னை மிக மோசமான நிலையில் உள்ளது.

    பா.ஜ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்று மாமான்றத்திற்கு சென்றால் அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள். கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டிய நலத் திட்ட உதவிகளை வாங்கி தருவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன், மாவட்ட தலைவர் கிருஷ்ண குமார், பொதுச்செயலாளர் ஜெய்கணேஷ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் நவீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×