என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொடுத்த 2 வாலிபர்கள் கைது

    தி.மு.க. பிரமுகர் வீட்டில் வெடி குண்டு வீசிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் 2-வது நேதாஜி நகர் அழகர்சாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிராங்ளின் (59). பொதுப்பணித்துறை காண்டிராக்டர். தி.மு.க. பிரமுகர். சம்பவத்தன்று பிராங்ளின் வெளியே சென்று இருந்தார். வீட்டில் அவரது மனைவி குளோதினி, பேரன், பேத்திகள் மட்டும் இருந்தனர்.

    அப்போது  மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த 2 நாட்டு வெடி குண்டுகளை பிராங்ளின் வீடு மீது அடுத்தடுத்து வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து  தப்பி சென்று விட்டனர். வீட்டின் முன் பக்கத்தில் கிரீல் கதவு மூடி இருந்ததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

    இந்த தகவல் கிடைத்ததும் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா தலைமையில்  ஒதியஞ்சாலை இன்ஸ்பெக்டர் மனோஜ்,  சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.பிராங்ளின் வீடு மீது  வாலிபர் வெடி குண்டு வீசும் காட்சி அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதனை ஆய்வு செய்த போது குண்டு வீசியவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற சதிஷ் (23) என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் விக்னேசுக்கு முதலியார் பேட்டையை சேர்ந்த அன்பரசு(24), ரெமோ(25)  ஆகியோர் உதவியது தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அன்பரசுவை  உப்பளத்தில் உள்ள ஹெலிபேடு மைதானத்திலும், ரெமோவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலும் கைது செய்தனர் . அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நேதாஜி நகரில் பாழடைந்த வீட்டில் பதுக்கி  வைத்திருந்த மற்றொரு நாட்டு வெடிகுண்டை பறிமுதல் செய்தனர்.
     
    கைதான 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    தி.மு.க. பிரமுகர் வீட்டில்  வெடிகுண்டு வீசிய விக்னேஷ் டி.வி. நகரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார். இந்த நிலையில் அவர் வெளிநாடு சென்று விட்டார். அந்த சமயத்தில் அப்பெண்ணிற்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் முடிந்தது. இந்த தகவல் விக்னேசுக்கு தெரிய வந்தது. அவர்  வெளிநாட்டில் இருந்தபோது ஏற்கனவே தான் காதலித்து வந்த பெண்ணிடம் பேசி வந்துள்ளார்.

    இதனை அப்பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இதனால் அவருக்கும் விக்னேசுக்கும் தகராறு ஏற்பட்டது. அவரை கொலை செய்ய விக்னேஷ் தனது நண்பர்கள் அன்பரசு, ரெமோ ஆகியோர் உதவியுடன் நாட்டு வெடிகுண்டு தயார் செய்துள்ளார். இந்த நிலையில் தி.மு.க. பிரமுகர் பிராங்ளினிடம் வெளிநாடு செல்ல விக்னேஷ் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்ததால், ஏற்கனவே தான் தயாரித்து வைத்திருந்த வெடிகுண்டை அவரது வீட்டில் வீசியது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் மற்றொரு வாலிபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வருகிறது. அவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

    கைதான ரெமோ, சாணிக்குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×