என் மலர்
உள்ளூர் செய்திகள்

FILEPHOTO
ஜல்லிக்கட்டு பணிக்கு சென்ற கிராம நிர்வாக உதவியாளர் பலி
கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் யூனியன், மதியநல்லூர் ஊராட்சியில் கிராம நிர்வாக உதவியாளராக பணி செய்து வந்தவர் கருப்பையா (வயது50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அங்கு சில பணிகள் செய்வதற்காக கருப்பையா தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
வாகனம் சென்னப்ப நாயக்கன்பட்டி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு, மின்னல்வேகத்தில் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் கருப்பையா தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைபார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு இறந்து கிடந்த கருப்பையாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பிறகு இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடிவருகின்றனர்.
ஜல்லிக்கட்டு பணிக்கு சென்ற கிராம நிர்வாக உதவியாளர் பலியான சம்பவம் அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story






