என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
திருவண்ணாமலையில் மனுதாக்கல் முடிந்ததும் பிரசாரத்தில் இறங்கிய வேட்பாளர்கள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மனுதாக்கல் முடிந்ததும் வேட்பாளர்கள் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கொரோனா பரவிவரும் நிலையில் நகர்மன்ற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
நேற்று மாலை 5 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. திருவண்ணாமலையில் நகர் மன்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று தி.மு.க., அ.தி.மு.க.வேட்பாளர்கள் அதிக அளவில் மனு தாக்கல் செய்தனர்.
சுயேச்சைகள் குறைந்த அளவில் மனு தாக்கல் செய்தனர். மாலை 4 மணி வரை வேட்பாளர்களின் வருகை அதிகமாக இருந்தது. அதன் பின்னர் சனி ஓரை என்பதால் ஒருசிலர் மட்டும் மனு தாக்கல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மட்டும் 843 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மொத்த 1,592 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
நேற்று மனு தாக்கல் முடிந்தவுடன் திருவண்ணாமலை பகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சார்பில் தேர்தல் பணிமனைகள் திறக்கப்பட்டன. அமைச்சர் எ.வ.வேலு, தி.மு.க பணிமனைகளை திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து வேட்பாளர்கள் உடனடியாக பிரசாரத்தை தொடங்கினர். அவர்கள் வீடு வீடாகச் சென்று துண்டுப்பிரசுரங்களை வழங்கி ஓட்டு கேட்டனர். வேட்பாளர்கள் பிரச்சாரம் தொடங்கியதால் திருவண்ணாமலை நகர வீதிகள் கலகலப்பாக காணப்பட்டன.
இதே போல அ.தி.மு.க.வினரும் தேர்தல் பணி மனைகளை திறந்து பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். தி.மு.க.- அ.தி.மு.க.வினர் இடையே போட்டி நிலவுகிறது.
மேலும் பா.ஜ.க.மற்றும் பா.ம.க வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
Next Story






