என் மலர்
உள்ளூர் செய்திகள்

வீரளூரில் அமைச்சர் எ.வ.வேலு பாதிக்கப்பட்ட பெண்களிடம் குறைகளை கேட்டபோது எடுத்தபடம்.
வீரளூரில் அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு
சுடுகாட்டு பிரச்சனை தொடர்பாக இருதரப்பினர் மோதல் ஏற்பட்ட வீரளூரில் அமைச்சர் எ.வ.வேலு திடீரென ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள வீரளூர் கிராமத்தில் சுடுகாட்டு பாதை பிரச்சனை தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பல்வேறு அமைப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணைத் தலைவர் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டவர்கள் பகுதியை நேரில் சென்று பார்வையிட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அருந்ததியின மக்கள் கொடுத்த புகாரின் பேரில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
அப்போது அவர் அருந்ததியினர் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று என்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன? அவர்களின் தேவை என்ன? என்பதை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில்:-
மன மாற்றம் ஒன்றே பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.மனமாற்றம் இல்லை என்றால் பிரச்சனை அதிகரிக்கும். இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். தற்போது உள்ள அரசு சாதி மதம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை.
மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, அருந்ததிய மக்களுக்கு 3 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி உள்ளார். இதனால் இன்று அருந்ததியின மக்கள் டாக்டர் களாகவும், பொறியாளர் களாகவும், பல்வேறு அரசு அதிகாரிகளாகவும் உள்ளனர். சாதி, மதத்தை பார்த்தால் எந்த கிராமத்திலும் வாழ் முடியாது.
உங்கள் பிரச்சினையை அறிந்தவுடன் முதல் அமைச்சரிடம் பேசி அரசு அதிகாரிகளை அனுப்பி உங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்தேன். உங்கள் கிராமத்தில் போலீசார் எத்தனை நாள் பாதுகாப்பு வழங்க முடியும்? உங்கள் மனதை தேற்றிக்கொண்டு போலீசாருக்கு விடை கொடுங்கள். இனி எந்த பிரச்சினையும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதன் பின்னர் அங்கிருந்த 300&-க்கும் மேற்பட்ட மக்கள் மனுக்களை கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மனுவில் கேட்கப்பட்ட அனைத்து தேவைகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் வீர ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்த 100&-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது பெண்கள் கூறுகையில்:-
கடந்த 15 நாட்களாக எங்கள் கிராமத்தில் ஒரு ஆண்கள் கூட இல்லை.இதற்கு யார் காரணம்? என்ன சம்பவம் நடந்தது? என்று எங்களுக்கு தெரியாது. இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் தலைமறைவாகவும், எங்கள் அனைவரையும் குற்றவாளிகளாகவும் போலீஸ் தரப்பில் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்? இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் பேசும் போது:-
நாட்டில் சாலைகள் யாருக்கும் சொந்தமில்லை.அரசாங்க சாலை அனைத்து சாதியினருக்கும் சொந்தமானது. பொதுமக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
ஊர் மக்களின் நலன் கருதி அரசு தரப்பில் 10 நாட்களுக்குள் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டத்தில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு கோரிக்கைகள் குறித்து பேசி முடிவு செய்து இரு தரப்பிலும் சமாதானமாக செல்ல வேண்டும் என்றார்.
Next Story






