search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு வெடிகுண்டுகள்
    X
    நாட்டு வெடிகுண்டுகள்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொடர்ந்து சிக்கும் நாட்டு வெடிகுண்டுகள்- பயங்கரவாத செயல்களுக்கு தயாரிக்கப்பட்டவையா?

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த வ.புதுப்பட்டி-கான்சாபுரம் பகுதியில் ஓடை பகுதியில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் வன விலங்குகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதனால் விலங்குகளை கட்டுப்படுத்தவும், வேட்டையாடவும் நாட்டு வெடி குண்டுகளை சிலர் தயாரித்தனர்.

    நாளடைவில் கிராம பகுதிகளில் ஏற்படும் மோதல் சம்பவங்களிலும் இந்த வெடிகுண்டுகள் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன.

    இதற்கிடையில் அந்த பகுதியில் நக்சல் படையினர் நடமாட்டம் காணப்பட்டது. அவர்களும் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்தனர். இதனை தொடர்ந்து போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பை கட்டுப்படுத்தினர்.

    இதனால் நாட்டு வெடி குண்டுகள் அந்த பகுதிகளில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. இந்த நிலையில் போலீசாரும் தங்கள் கண்காணிப்பை விட்டுவிட்டனர். இதனை பயன்படுத்தி சமீப காலங்களில் சிலர் நாட்டு வெடி குண்டுகளை மீண்டும் தயாரிக்க தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பை அடுத்த வ.புதுப்பட்டி-கான்சாபுரம் பகுதியில் ஓடை பகுதியில் முட்புதரில் கிடந்த சாக்கு மூட்டையில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கொலை சம்பவத்துக்கு பழிக்கு பழி வாங்க நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப் பட்டிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள தெற்கு கோட்டையூர் காலனி பகுதியில் ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளியின் பின்புறம் உள்ள தரிசு நிலத்தில் அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் விவசாய பணிக்காக டிராக்டர் ஓட்டி சென்றார்.

    அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக டிராக்டரை நிறுத்தி விட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது தரிசு நிலத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடந்ததை பார்த்தார். அதில் ஒரு நாட்டு வெடிகுண்டு மீது டிராக்டரின் சக்கரம் ஏறியதால் குண்டு வெடித் திருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் நாட்டு வெடிகுண்டுகள் சிதறி கிடக்கும் தகவல் போலீஸ் சூப்பிரண்டு மனோகருக்கு தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் போலீஸ் சூப்பிரண்டு மனோகர், டி.எஸ்.பி. சபரிநாதன் தலைமையிலான காவல் துறையினர் விரைந்து வந்து அந்த பகுதியை பார்வையிட்டனர். அங்கு கிடந்த 6 நாட்டு வெடிகுண்டுகளை வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். தொடர்ந்து வேறு எங்காவது நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

    நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பு நிலையிலேயே கண்காணித்து அதனை தடுத்தால் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்காது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

    போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாததால் தான் யாரோ சிலர் மீண்டும் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் இறங்கி உள்ளனர். பயங்கரவாத செயல்களுக்கு இவற்றை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கலாம்? என்ற சந்தேகமும் நிலவுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் அசம்பாவித சம்பவங்கள் தடுக்கப்படலாம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×