search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரை-ராஜபாளையம் சாலையில் சேதமடைந்துள்ள கல் தூண் மண்டபம்.
    X
    மதுரை-ராஜபாளையம் சாலையில் சேதமடைந்துள்ள கல் தூண் மண்டபம்.

    சேதமடைந்த நிலையில் காணப்படும் கல்தூண் மண்டபங்கள்

    சாலையோரத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள கல்தூண் மண்டபங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    ராஜபாளையம்

    மதுரையில் இருந்து திருமங்கலம், கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், கடைய நல்லூர், தென்காசி, குற்றாலம் வரையிலான பகுதிகளில் 350 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான வரலாற்றுப் புகழ்மிக்க கல்தூண் மண்டபங்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிதைந்து வருகின்றன. 

    இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர்கள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராஜபாளையத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் உள்ள கல்மண்டபம் சிதிலமடைந்த நிலையில் தூண்கள் சரிந்து அழிந்து வருகிறது. 

    இதுகுறித்து ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரி யரும், தொல்லியல் ஆய்வாளருமான கந்தசாமி கூறியதாவது:- 

    17&ம் நூற்றாண்டில் தமிழகத்தின் தென்பகுதியை ஆட்சி செய்த மதுரை நாயக்க மன்னர்களில் சிறந்து விளங்கியவர் திருமலை நாயக்கர். அவர் மதுரையில் இருந்து குற்றாலம் வரையிலும், அதேபோல் திருநெல்வேலி வரையிலும் பல இடங்களில் கல்தூண் மண்டபங்கள் மற்றும் தங்கும் சத்திரங்களை கட்டினார்.  

    அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பாதையில் நீண்ட பயணத் தின் போது கல் மண்டபங்கள் மற்றும் சத்திரங்களில் தங்கி இளைப்பாறினர். 

    திருமலை நாயக்கர் ஆட்சி புரியும்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், குற்றாலநாதர் கோவில் போன்ற கோவில்களில் உச்சிகால பூஜை முடிந்த பிறகு மதிய உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அவர் மதுரையில் இருக்கும்போது கோவில்களில் பூஜை நடைபெறுவதை மணியோசை கொண்டு அறிந்துகொள்ள வழிநெடுக கல் மண்டபங்களை கட்டி அங்கு மணிகளை கட்டி வைத்தார். 

    பூஜை தொடங்கியவுடன் கல் மண்டபங்களில் அமைக்கப்பட்ட மணிகளை ஒவ்வொரு மண்டபங்களில் இருந்தும் வரிசையாக அடுத்தடுத்து ஒலிக்கச்செய்து பூஜை தொடங்கியதை அறிந்து கொண்டார். எனவே கல் மண்டபங்கள் மணிமண்டபங்கள் எனவும் அழைக்கப்பட்டன. அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கல் மண்டபங்கள் பெரும்பாலான இடங்களில் சிதைந்து காணப்படுகின்றன. 

    ராஜபாளையம் அருகே பிரதான சாலையின் ஓரங்களில் ஏராளமான கல் மண்டபங்கள் காணப்படுகின்றன. அவற்றில் பல மண்டபங்கள் அழியும் தருவாயில் உள்ளன. இன்னும் பல மண்டபங்கள் இன்று வர்த்தக கட்டிடங்களாக செயல்பட்டு வருகின்றன. சில கல் மண்டபங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.  

    ராஜபாளையத்தில் அமைந்துள்ள கல் மண்டபத்தில் மேல் விதானத்தில் அலங்காரப் பூக்களை சிற்பிகளால் மிக நேர்த்தியாக வடிவமைக் கப்பட்டுள்ளன. கல்தூண்கள் எண்பட்டை கோணங்கள் கொண்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட தூண்கள் அழகாக செதுக்கப்பட்டு உள்ளன. 10&க்கும் மேற்பட்ட கல் தூண்களில் பல தூண்கள் சரிந்த நிலையில் முட்புதர்கள் சூழப்பட்டு காணப்படுகிறது. கல் மண்டபங்கள் சில காலங்களுக்குப் பிறகு அறைகளாக உரு வாக்குவதற்காக செங்கல் கட்டுமானங்கள் கட்டப்பட்டதாக தெரிகிறது. 

    இந்த செங்கல் கட்டுமானங்கள் தற்போது இடிந்து விழுந்துள்ளது. இத்தகைய கல்தூண் மண்டபங்களை பாதுகாப் பதற்காக மக்கள் ஆர்வலர் குழுக்கள்  இணைந்து செயல் படும்போது ஊரின் பெருமையையும், பாரம்பரிய சின்னத்தின் முக்கியத்துவத்தையும், பிற்கால சந்ததியினருக்கு அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நாயக்க மன்னர்கள் காலத்தில் மதுரையில் இருந்து செல்லும் முக்கிய வழித்தடமாக இருந்த இந்தப்பகுதியின் வரலாற்றை பாதுகாக்க முன்வர வேண்டும். 

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×