search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைதான கிராண்ட் விக்டர் கென்னா, சுக்குடி.
    X
    கைதான கிராண்ட் விக்டர் கென்னா, சுக்குடி.

    பெருந்துறையில் கைதான நைஜீரியா வாலிபர்கள் புழல் சிறையில் அடைப்பு

    நைஜீரியா வாலிபர்கள் 2 பேரும் உரிய பாஸ்போர்ட் இல்லாமலும், அடையாள அட்டை இல்லாமலும் எப்படி இந்தியாவுக்கு வந்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

    மேலும் வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் தொழில் சம்பந்தமாக பெருந்துறை பகுதிக்கு வந்து செல்கிறார்கள். இதனால் போலீசார் பெருந்துறை பகுதியில் சட்ட விரோதமாக யாராவது தங்கி உள்ளார்களா? வந்து செல்கிறார்களா? என அடிக்கடி ஆய்வு செய்தும் வருகிறார்கள்.

    இந்த நிலையில் பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் மற்றும் போலீசார் பெருந்துறை பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்று ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் அங்கும் இங்கும் சுற்றி கொண்டு இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் பேசிய மொழி போலீசாருக்கு புரியவில்லை. இதனால் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று மொழிபெயர்ப்பாளர் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நைஜீரியா அபாய பகுதியை சேர்ந்த கிராண்ட் விக்டர் கென்னா (31), லாகோசை சேர்ந்த சுக்குடி (28) என்பதும், அவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பூர் பகுதியில் சுற்றி திரிந்ததும், தொடர்ந்து பஸ் ஏறி பெருந்துறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம் சிக்கியதும் தெரிய வந்தது.

    இதையடுத்து பாஸ்போர்ட் இல்லாமல் சுற்றி திரிந்ததாக நைஜீரியா வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் 2 பேரும் உரிய பாஸ்போர்ட் இல்லாமலும், அடையாள அட்டை இல்லாமலும் எப்படி இந்தியாவுக்கு வந்தார்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் இதே போல் வேறு யாராவது சட்ட விரோதமாக தங்கி உள்ளார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கைது செய்யப்பட்ட 2 நைஜீரியா வாலிபர்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×