search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.
    X
    மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் ஆய்வு செய்தார்.

    மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை

    மீன் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மொத்த வியாபாரக் கடைகளில் தற்சமயம் தை மாதம் என்பதால் மீன்களின் வியாபாரம் மந்தமாக இருக்கும் என்ற காரணத்தினால் சுமார் 6 கடைகள் மட்டுமே இன்று செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட் பழமைவாய்ந்த மார்க்கெட் ஆகும். இங்கு நாள்தோறும் இரவு ஒரு மணி முதல் அதிகாலை 6 மணி வரை கேரளா, தூத்துக்குடி, ராமேசுவரம் போன்ற பல்வேறு மீன்பிடி துறைமுகங்களில் இருந்து குளிர்சாதன கனரக வாகனங்களின் மூலமாக மீன்கள் கொண்டு வரப்படுகின்றன.

    சிவகங்கை மாவட்டம் கீழவளவு, சிங்கம்புணரி, திருமயம், எஸ்.எஸ். கோட்டை, பொன்னமராவதி, கீழசெவல்பட்டி, மதகுபட்டி, நெற்குப்பை என பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் நாள்தோறும் இந்த மீன் மார்க்கெட்டுக்கு வந்து கடல் மீன்களான நெய்மீன், வாழை மீன், பாறை, நகரை, கிழங்கான் போன்ற பலதரப்பட்ட மீன்களும், அதேபோல் கண்மாய், குட்டை போன்றவைகளில் வளர்க்கப்படும் வளர்ப்பு மீன்களான, சிலேபி கெண்டை, ரோகு, கட்லா, போன்ற மீன்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் டன் கணக்கில் வாங்கி சென்று விற்பனை செய்வது வழக்கமாகும்.

    அப்படி வாங்கிச் செல்லும் மீன்கள் தரமில்லாத பழைய மீன்கள் விற்கப்பட்டு வருவதாக வந்த ரகசிய தகவலையடுத்து திருப்பத்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி தியாகராஜன் திடீர் சோதனை நடத்தினார். அப்போது ஐஸ் கட்டிகள் போடப்பட்ட நிலையில் இருந்த மீன்களை ஆய்வு செய்ததில் அவை கெட்டுப்போன பழைய மீன்கள் என தெரியவந்தது. இதையடுத்து சுமார் 20 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களை பேரூராட்சி பணியாளர்கள் உதவியோடு பறிமுதல் செய்து அவற்றை கிருமி நாசினி தெளித்து அழித்தார்.

    மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும் வியாபாரிகள் மீது அபராதம் விதிப்பதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர் மற்றும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் உடனிருந்தனர்.

    மேலும் மீன் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் மொத்த வியாபாரக் கடைகளில் தற்சமயம் தை மாதம் என்பதால் மீன்களின் வியாபாரம் மந்தமாக இருக்கும் என்ற காரணத்தினால் சுமார் 6 கடைகள் மட்டுமே இன்று செயல்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×