search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரகுருபரன், செண்பகவள்ளி, ஹரிபிரசாத்
    X
    குமரகுருபரன், செண்பகவள்ளி, ஹரிபிரசாத்

    வாலிபரின் காமபசிக்கு இரையான மாணவி உயிரை மாய்த்த பரிதாபம்

    திருவண்ணாமலையில் ஒன்றுமறியாத பிளஸ்1 மாணவியை திருமணமான வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்பபமான மாணவி அவமானம் தாங்காமல் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    திருவண்ணாமலை:

    பெண்களுக்கு சம உரிமை கொடுத்துவிட்டோம் என்பதெல்லாம் வெறும் பெயரளவில்தான் உள்ளது. பெண் குழந்தைகளுக்கு செல்லுமிடமெல்லாம் பல்வேறு பாலியல் தொல்லைகள் நடைபெற்று வருகிறது. ஆனால் எந்த சட்டமும் கடுமையாக இல்லாததால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பெண்களை போதப்பொருளாக கருதும் வக்கிர எண்ணம் பலரிடமும் உள்ளது.

    அவர்களை படிக்கும் பள்ளி, வேலை பார்க்கும் அலுவலகம், குடியிருக்கும் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தவறாக பயன்படுத்த முயற்சிக்கின்றனர். இதில் சில பெண்கள் மட்டுமே தப்பிக்கின்றனர். பலர் வலையில் சிக்கிய புள்ளிமான்களாக வாழ்க்கையை இழக்கின்றனர்.

    இது பெண்களுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. சமீபகாலமாக சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் செயல் அதிகரித்து வருகிறது. பெண் குழந்தைகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும், மனதைரியம் இல்லாததும் இத்தகைய செயல்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இதுபோன்ற செயல்களால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

    திருவண்ணாமலையில் ஒன்றுமறியாத பிளஸ்1 மாணவியை திருமணமான வாலிபர் ஒருவர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் கர்பபமான மாணவி அவமானம் தாங்காமல் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    பாதிக்கப்பட்ட மாணவி கடந்த சில ஆண்டுகளாக சென்னை மகாபலிபுரம் அருகில் பட்டிப்புலம் பகுதியில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வந்தார். அவர் பிளஸ்-1 படித்து வந்த நிலையில் கொரோனா பரவல் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை வந்து தனது பெற்றோருடன் தங்கியிருந்தார்.

    பின்னர் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிக்குச் சென்றார். அந்த மாணவிக்கு கடந்த மாதம் 24 ஆம் தேதி கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விடுதி வார்டன் மாணவியிடம் விசாரித்துள்ளார்.

    பின்னர் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து மாணவியை அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அதன்படி மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்து அவரிடம் வயிற்று வலி தொடர்பாக பெற்றோர் விசாரித்துள்ளனர்.

    இதற்கு பதில் அளிக்க மறுத்த மாணவி எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். அவரை திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். அதில் மாணவி கர்ப்பமானது தெரியவந்தது. சுய நினைவு இல்லாமல் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு நேற்று முன்தினம் சுய நினைவு திரும்பியது.

    இதுபற்றி அறிந்த போலீசார் மாணவியிடம் அவரது கர்ப்பத்துக்கு காரணமான நபர் யார்? என்பது குறித்து கேட்டனர். அவர்களுக்கு பதில் கூற முடியாத நிலையில் தன்னை கர்ப்பமாக்கிய நபரின் பெயரை எழுதி காட்டினார்.

    அதன்பேரில் மாணவி வசித்த வீட்டின் அருகில் குடியிருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது ஹரிபிரசாத் மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு அவள் தனிமையில் இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஹரி பிரசாத் திருமணமானவர். டிரைவராக வேலை பார்த்து வரும் இவர் காதல் திருமணம் செய்தவர் என்று கூறப்படுகிறது. இவரின் காம பசிக்கு இரையான மாணவி பரிதாபமாக உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தில் மாணவியின் தவறு எதுவுமில்லை. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டிய ஒரு மாணவியின் உயிரை வாலிபரின் வக்கிரம் பலியாக்கிவிட்டது. இதுபோன்ற சம்பவங்களில் உண்மை வெளியில் தெரிந்தால் அவமானம் என்று பெண்கள் கருதுவதால் ஆண்கள் பலர் தைரியமாக குற்றங்களில ஈடுபடுகின்றனர்.

    எனவே பெண் குழந்தைகளிடம் விழிப்புணர்வையும், மன தைரியத்தை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

    இந்த வழக்கில் மாணவி கர்ப்பமானதை மறைத்ததாக தலைமை ஆசிரியர் குமரகுருபரன், வார்டன் செண்பகவள்ளியையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×